பக்கம்:எக்கோவின் காதல்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

 முதலில் மறுமணம் தான் கவனிக்கப்பட வேண்டும் என்று நான் பலமுறை கூறி வந்திருக்கிறேன். அவ்வாறிருந்தும் விரும்புவாயா?' என்று கேட்கிறாய். புனிதம் உடன்பட்டால் புகலிடம் தர நான் சம்மதிக்கிறேன். செயலில் இறங்கச் சித்தனாயிருக்கிறேன்' என்றேன்.

'அப்படியானால் இதற்கு வேண்டிய ஏற்பாட்டை விரைந்து செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு வேலன் போய்விட்டான்.

புனிதம் என் சொத்தாகப் போகிறாள் என்று எண்ணியதும் பூரிப்படைந்தேன். மேலும் மறுமணம் என்றதும் மனம் துள்ளி விளையாடியது. திடீரென்று மகிழ்வு தடைப்பட்டது. யாரோ இருவர் என் முன் நின்றனர். அவர்கள் பேசவும் செய்தனர்.

"துரை! என்ன செயல் செய்யத் துணிந்து விட்டாய்! நீ நினைப்பது பெருந்தவறு - என்பதை உணராமல் உடன்பட்டு விட்டாய்! அவள் உன் சகோதரி என்று எண்ணியதை மறந்துவிட்டாயா?” என்றார் ஒருவர்.

மற்றவர்; “அதனாலென்ன? அவள் நிலைக்கிரங்கியதால் அந்த எண்ணந் தோன்றியது. அதனால் 'சகோதரி' ஆய்விடுவாளா? மேலும் மணந்து கொள்ளு முன்பு யாரும் எந்தப் பெண்ணையும் அப்படித்தான் எண்ணுவார்கள். அதுதான் இயல்பு. அவருக்குள் அன்பு தோன்றிக் காதல் பெருகிய பின்பு முதலில் சகோதரர் எண்ணந் தோன்றியதே! அவள் உன்னைக் காதலனாகக் கருதுகிறாள். நீயோ விதவை என்ற சொல்லே இந்த நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும் என்று மனமார விழைகின்றாய். அதனால் தயங்காதே! தலை நிமிர்ந்து நில்! கூசாமல் குதித்துவிடு!” என்றார்.

“அப்படியானால் நீ உறுதியற்றவனாகிறாய்! மனக் கட்டுப்பாட்டை மதியாதவனாகிறாய்! முதலில் உடன் பிறப்பு