பக்கம்:எக்கோவின் காதல்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
சந்தேக முடிவு

மெருகு குலையாத மோட்டாரில் வந்திறங்கினார் கோடீசுவரர் கோபாலன்.

“வாங்கோ! வாங்கோ! உங்களுக்காகத் தான் வந்து காத்திண்டிருக்கேன். வரச் சொன்னேளாமே!” என்று குழைந்து எழுந்து நின்றார் பஞ்சாங்கம் பரமேசுவர அய்யர்.

“ஆமாங்க சாமி! உள்ளே வாங்க!” என்று சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார் முதலியார்.

பின் தொடர்ந்தார் அய்யர். ஒரு கட்டு நோட்டுப் புத்தகத்தை அய்யருக்கு முன் தூக்கிப் போட்டு விட்டு முதலியாரும் உட்கார்ந்தார்.

"சாமி! இந்தச் சாதகங்களை எல்லாம் கொஞ்சம் கவனாமாகப் பார்க்க வேண்டும்.”

“அடடா! என்ன அப்படிச் சொல்றேள்! உங்க விஷயத்திலே அசிரத்தையா? என் சொந்த விஷயம் போலேன்னோ கவனிச்சிண்டிருக்கேன்.”

"ஆமா! முன்னே கூட அப்படித்தான் சொன்னீர்கள்! எல்லாப் பொருத்தமும் நன்றாயிருக்கிறது என்றீர்! ஒன்றுக்கு மூன்று போச்சு. அதனாலே கொஞ்சம் கவனமாக இதைப் பாருங்கோ!"