பக்கம்:எங்கே போகிறோம்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுதந்திர தின விழாச் சிந்தனைகள் 11

ஆனந்த சுதந்திரமா? இல்லை. எத்தனையோ நெருக்கடிகள்! எத்தனையோ தொல்லைகள்! அடிமைத்தனங்கள் பயந்தாங்கொள்ளித் தனங்கள் பயமுறுத்தல்கள்! இவைகளுக்கிடையே இந்தச் சமுதாயம் மெள்ள ஊர்ந்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது வானொலி நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும்பொழுது, இரண்டு மூன்று காட்சிகள்! ஒரு இடத்தில் போராட்ட உண்ணாவிரதம்! இன்னொரு புறத்தில் மகிழ்வுந்தில் கூக்குரலிட்டுக் கொண்டு, கோஷம் எழுப்பிக்கொண்டு இந்த நாட்டு மகளிர் செல்லுகிறார்கள். மகளிர் எழுப்பிய முழக்கொலி “பெண்களை விடுதலை செய்! பெண்களுக்குச் சுதந்திரம்” நாடு விடுதலை பெற்று 47 ஆண்டுகள் கடந்த பிறகும் “பெண்களுக்கு விடுதலை இல்லை” என்று தெருவில் நின்று முழக்கொலி செய்கிறார்கள் என்றால் ஆனந்த சுதந்திரம் ஆக முடியுமா?

சுதத்திர தினவிழா என்பது கொடியேற்றுதல் மட்டுமல்ல. ஒரு கணக்காய்வு செய்யவேண்டும். நேற்று என்ன நடந்தது? இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாளை என்ன நடக்கும்? நாளை என்ன நடக்குமாறு செய்யவேண்டும்? இந்தக் கணக்காய்வு செய்யாது போனால் சுதந்திர தினவிழாவுக்கு என்ன பொருள்? நேற்றிலிருந்து இன்று பிறக்கிறது. இன்றிலிருந்து நாளை பிறக்கிறது.

இன்றைக்கு நமது இளைய சமூகத்தைப் பற்றி, இளைய பாரதத்தைப் பற்றி, அடுத்து வருகின்ற தலைமுறையினரைப் பற்றி, நமக்குக் கவலை இருக்கிறதா? அதற்குரிய திட்டங்களைத் தீட்டுகிறோமா? அப்படியே தீட்டினாலும், அந்தத் திட்டத்தினுடைய பயன்கள் குழந்தைகளுக்குப் போய்ச் சேருகிறதா? இவை