பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

141


அபாயக் குறி

ஏழ்மையைக் கண்டு உலகம் இகழ்கிறது, வெறுக்கிறது என்பது தெரிந்து, தன் ஏழ்மையை மறைக்கப் பார்க்கும் ஏழ்மையின் நிலைமை மிக மிக வேதனை நிரம்பியது. இடிந்த வீட்டுக்கு மண் பூச்சு, கிழிந்த கோட்டுக்கு ஒட்டு வேலை, சரிந்த சுவருக்கு முட்டுக் கொடுத்தல் போன்றவைகளை செய்யும்போது. அந்த ஏழையின் நிலைமையைக் காண்போர் இரத்தக் கண்ணீர்விட வேண்டி நேரிடும். இருக்கும் ஏழ்மையை விளக்கமாகப் பலர் அறியும்படி தெரிவித்து, அதன் மூலம் உலகின் கருணை தன் பக்கம் வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடையும் ஏழை பரிதாபத்துக்குரிய சோக சித்திரம். ஏழை பல ரகம், நிலைக்கு ஏற்றபடி அவனைக் கொடியவன், முரடன், முட்டாள், வேஷக்காரன், கபடன், போக்கிரி என்று பலவாறு ஏசிப்பேசும் உலகம் அவனுடைய அப்போதையை நடவடிக்கையை கவனிக்கிறதேயொழிய, ஏன் அவன் முரடனானான், ஏன் கபடனானான், முட்டாளாகவேண்டிய காரணமென்ன? என்று யோசிப்பதில்லை. இப்படிப்பட்ட ஏழைகளின் ரகங்களிலே எந்த ரகத்திலேயும் தாங்கள் தள்ளப்படாமலிருக்க வேண்டுமே என்ற கவலை, திகில் மற்றவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. ஆகவே அவர்கள் தங்கள் தங்களின் நிலைமை கெடாதபடி பார்த்துக் கொள்ளும் சுயகாரியத்திலேயே கண்ணுங் கருத்துமாக இருந்து விடுகின்றனர். ஏழை அழுகிறான். ஏழையின் தொகை வளருகிறது. ஏழையின் ரகங்கள் வளருகின்றன. கவனிப்பார் இல்லை. சமுதாயத்திலே ஏழைகளின் தொகை பெருகுவது, படகுக்கு அடியிலே ஏற்படும் வெடிப்புகள் என்பதை உணருவதில்லை ஓடத்திற்கு அலங்காரப் பூச்சுத் தேடுகிறார்கள். உல்லாசப் பயணத்துக்கு, நான் நீ என்று முந்திக் கொள்கிறார்கள்.