பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

51


தாயகம். மாற்றாரை மண்டியிடச் செய்திருக்கிறது-- வெற்றிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன--மண்டலங்கள் பிடிபட்டன. மாநகர்கள் தரைமட்டமாக்கப்பட்டன, கொன்று குவித்தது போக மிச்சம் இருப்பவர்களை, அடிமைகளாக்கி, வீரம் அறிவிக்கப்படுகிறது!

தாயகம் ! கெம்பீரம், வீரம், வளம், எனும் அணி பணிகளுடன்!!

ஆனால், நமக்கோ ஒண்டக் குடிசையில்லை. நாமோ, தாயகத்தின் வெற்றிக்காகக் குருதிகொட்ட அழைக்கப்படுகிறோம். முரசு கேட்டதும் பாய்ந்து செல்கிறோம். மாற்றான் புறமுதுகு காட்டும்வரை போரிடுகிறோம். தாயகம் ! தாயகம் !! என்று தளபதிகள் களத்திலே முழக்கமிடும்போது, எழுச்சி கொள்கிறோம். எத்தனை பேர் எதிரிகள், என்ன ஆயுதம் நம்மிடம், என்பது பற்றிய கவலையற்றுப் போரிடுகிறோம். பிணங்களைக் குவிக்கிறோம், பிறந்த நாட்டின் பெருமைக்காக--ஆனால் அந்தப் பிறந்த நாட்டிலே, நமக்கு உள்ள நிலை என்ன? அந்த வீர இளைஞன் கூறியது போல, காட்டு மிருகங்களைவிடக் கொடுமையானது ! நமக்கும் தானே இது தாயகம்? நாம், அவ்விதம்தான் கருதுகிறோம். ஆனால், நாடாளும் நாயகர்கள், அவ்விதம் கருதுவதாகத் தெரியவில்லை, கருதினால், நம்மை இந்தக் கதியிலா வைத்திருப்பர் நியாயமான கேள்வி கேட்டான் இளைஞன், நேர்மையாளன் ! அஞ்சா நெஞ்சன் ! ஏழை பங்காளன் !!

மக்கள் வாழ்த்துகின்றனர் தம் சார்பாகப் பேசும் இளைஞனை -- அவனோ, வாழ்த்துப்பெற, உபசார மொழிகளை வழங்குபவனல்ல. அவன் உள்ளத்திலே தூய்மையான ஒரு குறிக்கோள் இருக்கிறது-- கொடுமையைக் களையவேண்டும் என்ற குறிக்கோள்; உறுதிப்பாடு.