பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

எட்டு நாட்கள்


எனவே ப்ரூனோ மீது நாத்தீகக் குற்றத்தை வீசியது, அன்றைய மனப்போக்கிலே, திடுக்கிடக்கூடிய, தனிச் சம்பவமல்ல.

ஜியார்டானோ ப்ரூனோ, அன்று ஆதிக்கத்திலிருந்தவர்கள் எந்த அடிப்படையின் மீதமர்ந்து அரசோச்சி வந்தார்களோ, அந்த அடிப்படைக்கு ஆட்டம் கொடுக்கக்கூடிய அறிவுப் பணியில் ஈடுபட்டிருந்தான். அவன் இருந்தால் தங்கள் ஆதிக்கம் அழிந்துபடும் என்று அஞ்சினவர்கள். அவனுடைய அறிவுப் பணியைத் தடுத்திடவோ, தகர்த்திடவோ முடியாத மூட மதியினர், அவனைக் கொன்றால் தான் தாங்கள் வாழ முடியும். என்று எண்ணினர்--அவனும் சாகச் சம்மதித்தான்.

எட்டு நாட்கள் தவணை தந்தனர். ஏன்? நெஞ்சு உரமிக்கவன்தான் ப்ருனோ, கொண்ட கொள்கைக்காகவே ஆண்டு பல ஆபத்தால் வேட்டையாடப்பட்டு அலைந்து கொண்டிருந்தவன்தான். அச்சம் அவனை அடக்கியதில்லை. ஆசை அவனைக் கட்டுப்படுத்தியதில்லை. அரண்மனை கண்டு அவன் சொக்கினதில்லை. மாளிகை கண்டு மதுரவாழ்வு வேண்டி நின்றவனல்ல. நிந்தனையை நிலாச்சோறு எனக் கொண்டான். வேதனையை வேண்டுமளவு உண்டான். எதற்கும் சளைக்கவில்லை. எதனாலும் மனம் இளைக்கவில்லை; எனினும், மரணம் தன் குரூரக்குரல் கொடுத்து நிற்பதைக் காணும்போது. நாட்கணக்கிலே உயிர் ஒட்டிக்கொண்டிருந்ததை உணரும்போது, ஒருவேளை. உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நெஞ்சிலே ஒரு சிறு ஆசைப் பொறி கிளம்புமோ என்று எண்ணினர்; ஆவல் கொண்டனர்.