பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை

81


டைபீரியசுக்குத் துரோகமிழைத்தவனாவேன், என் குடும்பக் கீர்த்தியைக் கருக்கியவனாவேன்.

சந்தைச் சதுக்கத்திலே அவரைச் சாகடித்த போது, உயிர் பிரியுமுன், என் அண்ணன் என்னென்ன எண்ணினாரோ! அவர் மனக் கண்முன் என்னென்ன காட்சி தெரிந்ததோ! அறப்போர்-- முதல் கட்டம் -- முதல் பலி! இனி யார் முன்வருவார்கள்? அறப்போர் தொடர்ந்து நடை பெறுமா? அல்லது கொல்வார்களே என்று குலை நடுக்கம் பிறந்து, அனைவரும் ஒடுங்கிவிடுவார்களா? எதிர்காலத்தில் என்ன நடைபெறும்? யார், என் கொள்கையை மேற்கொண்டு போரிடுவர்? என்றெல்லாம் எண்ணியிருப்பார்! என்னைப்பற்றி எண்ணாமலா இருந்திருப்பார்! என் தம்பி இருக்கிறான் கெயஸ், அவன் வாளா இருக்கமாட்டான். அவனிடம் ஒப்படைக்கிறேன் அறப்போர் நடாத்தும் பெரும் பொறுப்பை, என்று எண்ணியிருப்பாரா! இறந்து படுமுன்னம் அவர் இதயத்திலே இந்த எண்ணங்கள் எழாமலா இருந்திருக்கும்? நிச்சயம் எண்ணியிருப்பார். ஒரு கணம், நம்பிக்கைகூடப் பிறந்திருக்கும். நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை பிறந்திருக்கத்தான் செய்யும். நான் வேறு எதற்கு இருக்கிறேன். தம்பி! என்று அழைத்தாரோ--"தம்பி இருக்கிறான் தருக்கர்களே! என்னைக் கொன்று போட்டுவிட்டால், போர் ஓய்ந்துவிடும், வெற்றி உங்களுக்குக் கிட்டிவிடும் என்று எண்ணாதீர், ஏமாளிகளே! தம்பி இருக்கிறான். என் வேலையை அவன் தொடர்ந்து செய்து வருவான். உங்களை வீழ்த்த வீரன் இருக்கிறான்--நான் கடைசி அல்ல--நான் துவக்கம்--" என்று முழக்கமிட்டிருப்பாரோ?

கெயஸ் கிரேக்கசின் உள்ளம் இவ்வாறெல்லாம் பேசாமலிருந்திருக்க முடியுமா?


எ - 6