பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருக்குறளில் வணிகம்

ஆட்டுச் சண்டை, மாட்டுச் சண்டை, கோழிச் சண்டை முதலியவைகளைப் பார்ப்பதில் மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி. அதிலும் யானைப் போரைப் பார்ப்பதில் ஒருவனுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படும். அதிலும் யானை தன் பக்கம் திரும்பி விட்டால் தீங்கு விளையுமே என்ற அச்சமும் ஏற்படும். ஆனால் அவன் குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைப் பார்ப்பதில் அவனுக்கு அந்த அச்சம் ஏற்படாது. அது எப்படிப்பட்டது என்பதை வள்ளுவர் அடியிற்கண்டவாறு கூறுகிறார்.

அதிக மூலதனத்தை வைத்துத் தொழில் செய்யும் ஒரு வணிகன், தன் வணிகத்தை எவ்வித இழப்புமின்றி வெற்றியோடு செய்து மகிழ்கின்றானோ அதுபோன்று என்பதே. குறள் இதுதான் :

"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை.”

(758)

இது ஒவ்வொரு வணிகரும் தம் உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ளவேண்டிய ஒன்று.

மற்றொன்று :

வணிகத் தொழில் புரியும் அன்பர்களுக்கு வள்ளுவர், எல்லா வணிகமும் வணிகமல்ல; ஒரு உயர்ந்த வணிகம் செய்ய வேண்டுமென்று ஒரு புதிய வழியைக் காட்டுகின்றார். அது வணிகத் தொழில் புரிகின்றவர்கள் பிறர் பொருளையும் தம் பொருள் போல் கருதிச் செய்ய வேண்டும். அதுவே உயர்ந்த வணிகமுறையாகும் என்பது. குறள் இதுதான் :