30
பூச்சி பிடிக்கும் பல்லி சத்தமிட்டால் இவர்கள் ஏன் பேச்சை நிறுத்தவேண்டும், தரையை மூன்று தரம் தட்ட வேண்டும்?
அந்த நண்பர்களைக் கேட்டால் சாந்தமான நேரமாக இருந்தால் 'என்னமோ பழக்கம் சார். விட மாட்டேன்கிறது' என்று பதில் சொல்வார்கள்! இன்னும் சிலர் நாம் இப்படிக் கேட்டால், உங்களுக்கு வேறு என்னதான் வேலை! சுய மரியாதைக்காரர்களுக்கு இப்படி எதையாவது கிளரிக்கொண்டு கேலி செய்து கொண்டிருக்கத்தான் தெரியும் என்று சலித்துக் கொள்வார்கள்.
பூச்சி பிடிக்கச் செல்லும் பல்லியின் சத்தத்தைக் கேட்டதும் தாங்கள் பேசி அலசிக்கொண்டிருந்த அகில உலகப் பிரச்சினைகளையும் அலட்சியப்படுத்தி விட்டுத் தரையில் மூன்று தரம் தட்டுவதற்குப் பொருத்தமான காரணம் எதையுமே கூற முடியாது.
கொட்டாவி விடும்போது மூன்றுதரம் சிட்டிக்கை போடுவதும், போகும்போது எதிரே பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை என்று திரும்பிவிடுவதும், பல்லி சொல்லுக்குத் தரையைத் தட்டுவதும், அதற்குப் பலன் பார்த்துப் பதைப்பதும் மக்களிடம் எப்படியோ ஏற்பட்டு விட்ட பழக்கமும் அதனால் ஏற்பட்ட அறியாமையினாலுந் தான்.
இவைகளையெல்லாம் காரணந் தெரியாமல் ஏன் செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்பதைப் பற்றிய எண்ணம் ஒரு சிறிதுமின்றி, தங்களையறியாமலே பழக்கத்தினால் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட காரண காரியமற்ற செயல்கள் பழக்கத்தின் போராலும், வழக்கத்தின் மூலமாகவும் பல நடைபெறுவதை நாம் காண் முடியும்.
இவைகளைப் போலவேதான் திருமணக் காலங்களிலேயும் சில அர்த்தமற்ற காரியங்களைச் செய்து வருகிறார்கள்.