பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

காடுகள் அதிகம் நாடுகள் குறைவு. எனவே காட்டிலிருந்து நாட்டுக்குள் புகுந்து மனிதனை தாக்கிடும் புலியையும் எதிர்க்கும் உடல் வலிமையும் உள்ள உரமும் படைத்தவனைத்தான் பெண்கள் மணக்க வேண்டும் என்ற ஏற்பாடு——தீர்மானம் இருந்தது. பொருத்தமாக இருந்திருக்கலாம்.

இதே ஏற்பாடு இன்றைக்கும் இருக்கவேண்டுமா? உண்மையில் எத்தனை பேர் திருமணம் செய்து கொள்வதற்காக இத்தகைய புலி வேட்டைக்குப் போய்வரத் தயாராக இருப்பர் இந்த நாளில்? ஒருவரும் இருக்க மாட்டார்களே!

இன்று அத்தகைய ஏற்பாடும் பழக்கமும் ஒரு சிறிதும் இல்லையென்றாலும், தாலிக்கயிற்றில் மட்டும் பொன்னால் புலி நகமும் பல்லும் செய்து கோர்த்திட நாம் தவறுவதில்லை! இது தேவைதானா?

இன்றைக்கு நாடுகள் அதிகமாகவும் காடுகள் குறைவாகவும் இருக்கின்றன. இருக்கின்ற காடுகளிலும் புலிகள் காணப்படுவதும் குறைவு, அந்த நாட்களைப் போல இன்றும் நான் போய் காட்டில் புலி வேட்டையாடி, புலியைக் கொன்று அதன் பல்லையும், நகத்தையும் எடுத்துச் சென்று என் காதலியிடம் என் வீரத்தைக் காட்டி அவள் கழுத்தில் இவைகளைத் தலையாக கட்டுவேன் என்று எந்த இளைஞனாவது இன்றைக்குக் கிளம்பமுடியுமா? அப்படிக் கிளம்பினாலும் காடுகள் அனைத்தும் சர்க்காரின் ரிசர்வ் இலாகாவைச் சேர்ந்திருப்பதால் புலி வேட்டையாட விடமாட்டார்கள்.

பழைய காலத்தைப் போலவே இன்றும் புலி வேட்டையாடி காதலிக்கு தன்னுடைய வீரத்தை வெளிப்படுத்திய பிறகே மணமுடிப்பேன் என்று எவனாவது ஒரு வாலிப வீரன் எப்படியோ ஒரு புலியைக் கண்டு பிடித்து அதனைக் கொன்று விடுகிறான் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.