பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

அந்தக்காலம் என்பது முடிவுற்றது. அளவிட்டுக் கூற முடியாதது. அளக்க அளக்க நீண்டு கொண்டே போகிற கெஜக்கோல் அது!

ஆகவே 'அந்தக்காலம் என்று பேசுவதும்' அந்தக் கால ஏற்பாடுகள் என்று கூறுவதும், பழக்கங்கள் என்று சுட்டிக் காட்டுவதும் நிச்சயமற்றவைகளாகும். பொருத்தமானதாகவும் இல்லாதவைகளாகும்.

வைதீக நண்பர்களையே கேட்கிறேன்! அவர்கள் புராணப்படி பார்த்தாலும் அந்தக்காலம் என்பதைக் கூற முடியுமா? ஹரிச்சந்திரன் ஆண்ட காலமா ? இராமன் ஆண்ட காலமா? அவருக்கு முன்னர் அறுபதினாயிரம் மனைவியரை மணந்து வாழ்ந்ததாகப் பேசப்படும் தசரதன் காலமா? அதற்கு முன்னர் இருந்ததாகக் கூறப்படும் இலட்சுவாகு பரம்பரையினர் காலமா? எது அந்தக்காலம்? கூறுங்கள்! உலகம் தோன்றியது எனக் கூறப்படும் காலமா? அல்லது உலகம் தோன்றாத அநாதி காலமா? மகாவிஷ்ணு ஆலிலைமீது திருப்பாற் கடலில் பள்ளிகொண்டிருந்தார் என்று கூறும் புராண காலமா? அப்படிப்பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் உந்திக்கமலத்திலிருந்து முளைத்த தாமரை மீது பிரமா வீற்றிருந்த காலமா? பிரம்மாவின் நாவில் இருந்து சரஸ்வதி வேதங்களை ஓதிய காலமா? அது எந்தக்காலம்? புராணங்களின்படி பார்த்தாலும் அந்தக்காலம் இதுதான் என்றோ, அதுதான் என்பதாகவோ உறுதியாகக் கூறமுடியுமா? முடியாதே! முடியவில்லையே!!

எந்தக் காலத்தையாவது குறிப்பிட்டு அது தான் 'அந்தக்காலம்' என்று, நாங்கள் கூறும் காலம் என்று சொல்லிவிடட்டும். அந்தக்காலத்தில் உள்ள பழக்க வழக்கங்களை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்றாவது நிர்ணயம் செய்யட்டும்.

அப்படி ஏதாவது ஒரு காலத்தை 'அந்தக்காலம்' என்று தீர்மானித்து விட்டாலும், அதன்படி நடக்க, வாழ யாராலும் முடியாதே!