பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

இசைக்கருவிகள் எண்ணற்று இருந்தன. இசை நூற்களும் உண்டு. இசைக் கடலில் நீந்தி விளையாடி மகிழ்ந்தனர் மக்கள். ஆணும் பெண்ணும் பாடுவர், ஆடுவர். அரசனும், மக்களும், இசை பயின்றனர். இன்புற்றிருந்தனர்.

கடலைக் கண்டால் ஓர் பாடல்; கரியைக் கண்டால் ஓர் பாடல்; தளிரைக் கண்டு ஓர் பாடல்; தனது காதலியைக் கண்டு ஓர் பாடல் எனத், தமிழர், தமது இன்ப உணர்ச்சியை, இசை வடிவில் எத்துணையோ சிறப்புடன் வெளிப்படுத்தி வாழ்ந்தனர். இன்று தியாகராயர் கிருதிகளை விட வேறு இல்லை என்று, அவர்கள் முன்னால் கூறப்படுகிறது.

இசைச் செல்வத்தை இவ்வளவு பெற்று முன்னம் வாழ்ந்த தமிழர், இன்று கேட்பது, தமிழ் நாட்டிலே தமிழ்ப் பாடல்கள் அதிகமாக இருக்கவேண்டும் என்பதாகும். இந்த முயற்சியில் தமிழர் வெற்றி பெற்றால், இழந்த தமிழ் இசையை மீண்டும் பெற முடியும். ஆரியம் தமிழரின் எல்லா வகையான செல்வங்களையும் கொள்ளை கொண்டது போலவே, இசைச் செல்வத்தையும் கொள்ளை கொண்டது. இதனை அறிய, தமிழர் தொன்மை பற்றி ஆசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய அரிய நூலையும், மற்றையோரின் ஆராய்ச்சி நூற்களையும், தமிழர் படிக்க வேண்டுகிறோம். தமிழரின் மொழிவளம், ஆட்சிவளம், முதலிய துறைகள் பற்றிய அரிய ஆராய்ச்சிகளிலே உண்மைகள் மிளிரும். தோழர் தேவநேயப் பாவணர் எழுதிய ஒப்பியல் மொழி நூலில் உள்ளவைகளைத் தமிழர் கற்றுணர வேண்டும்.

தமிழ் இசை மறைந்து, வேற்று மொழியில் பாடல்கள் பரவியதனால். நாம் இன்பத்தை மட்டுமே இழக்கவில்லை. இயற்கையின் அழகை உணரும் அறிவையும் பகுத்தறிவுத் திறனையும் இழந்தோம். புதுப்பாடல்கள்