பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

புதுக் கருத்துக்கள் கொண்டதாக இருக்கவேண்டும். வெறும் பக்திரசம் ஊட்டக்கூடியதாக இருந்தால் போதாது. பக்திரசம் தமிழ் இசையில் இன்றும் உண்டு. ஆனால், ஆரியருக்கு அது பிடிக்காது. திருத்தாண்டவம் பிள்ளைத் தமிழ் போன்றவைகளைத் தோழர் சுந்தரமூர்த்தி ஓதுவார் எத்துணை இன்பரசத்துடன் பாடினார். தியாகய்யரின் ராமரசத்தை, அருணாசலக் கவிராயரின் தமிழ்க் கீர்த்தனங்களில் காண ஆரியர் மறுத்தனர். கோபால் கிருஷ்ண பாரதியின் நந்தன் பாடல்களும், சித்தர்களின் பாடல்களும், சுப்பராமரின் தமிழ்ப் பதங்களும் ஆரியருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே தான், தமிழிலே பாடல்கள் ஏது என்று கேட்கின்றனர். தோழர் மாரியப்பசாமி எனும் இசைச் செல்வர், தியாகய்யர் கீர்த்தனை மெட்டுகளிலேயே, செந்தமிழில் கிருதிகள் அமைத்து, இனிய முறையில் பாடுகிறார்! ஆரியருக்கு அது பிடிக்காது. அவர்கள் அசல் ஆரிய ரசமே தேடுவர். பக்தி என்ற ரசத்தையும் ஆரியத்தோடு கலந்து பருகுவரே யன்றித், தமிழோடு கலந்து பருகச் சம்மதியார். காரணம், தமிழர் என்றால் அவர்களுக்கு வேம்பு! அதற்குக் காரணம், அந்த ஒரே மொழிதான் பரந்த இந்தியாவில் ஆரியப் படையெடுப்பை தாக்குதலைப் பொருட்படுத்தாமல், பணியாமல் சீரிளமைத் திறனோடு விளங்குகிறது. அத்தகைய தமிழ், இசையில் மீண்டும் ஆதிக்கம் பெறுமானால், தமது கதி என்னாகுமோ என்று ஆரியர் பயப்படுகின்றனர்! தமிழில் இசை வளாக் கூடாதெனத் தடுக்கின்றனர், தமிழனுக்குத் தமிழ் இசையைப் பெற உரிமை உண்டு! அதைத் தடுக்க ஆரியருக்கு உரிமை இல்லை! ஆயினும் ஆரியர் தடுக்கின்றனர்! தமிழரே, உமது கருத்து என்ன? என்ன செய்யப்போகிறீர் என்று தமிழரைக் கேட்கிறோம்.

"நாம் பெருங்கூட்டம்! அஃதோர் சிறு கும்பல்" என்ற இனிமை ததும்பும் கருத்தை, இளமையின் முறுக்குடன் கலந்து கவியாக உலகினோர்க்குக் கூறினார் ஷெல்லி.