பக்கம்:எனது நண்பர்கள்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  107


பின்பு அவர் மத்திய அரசில், இந்திய அரசாங்க. ஆலோசகராகவும் பணிபுரிந்தார். இங்கிலாந்திலுள்ள இந்தியா மந்திரி சர். ஏ. டி. பன்னீர் செல்வத்தை தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும்படி விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இது இந்தியாவிலுள்ள பலருக்குப் பொறாமையையும், மனக்கசப்பையும் உண்டாக்கி விட்டது. 1940–ல் அவருக்குப் பெருமளவில் வழியனுப்பு விழா நடத்தினோம். விமானத்தில் பறந்து சென்றார்கள். போய்ச் சேர்ந்த செய்தி மட்டும் வரவில்லை. புறப்பட்ட விமானமும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒமாங் கடலின் மேல் பெட்ரோல் எண்ணெய்கள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது உடலையும் விமானத்தையும் ஒமாங் கடல் கொள்ளை கொண்டுவிட்டது என்ற செய்தி தெரியவந்தது. தமிழகமே கண்கலங்கியது. என் செய்வது?

தமிழ் நலனுக்கு, தமிழர் நலனுக்கு, தமிழகத்தின் நலனுக்குத் தொண்டு செய்து வந்த தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து இழந்து கொண்டே வருகிறோம். அவர்களில் ஆங்கிலக் கடல் நீந்தி தமிழ்க் கரையேறிய நண்பர் சர்.ஏ.டி. பன்னிர்ச் செல்வம் அவர்களை உப்புக் கடல் ஒன்று விழுங்கிவிட்டதை அறிந்து உலகம் கண்ணிர் உகுத்தது. யார் யாருக்கு அனுதாபம் கூறுவது? மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவருக்கும் நல்லாறுதல் கூற முடியும்.