பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192


தம்பி பகவதிக்கு டைபாய்டு

திருநெல்வேலியில் தம்பி பகவதி, அம்மா,சிற்றப்பா மூவரும் டைபாய்டு ஜுரத்தால் பீடிக்கப்பட்டார்கள். வீட்டில் வைத்து சிகிச்சை செய்யமுடியவில்லை. பாளையங்கோட்டைஆஸ்பத்திரியில் மாதக்கணக்கில் அவர்கள் இருக்க நேரிட்டது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அம்மாவும், சிற்றப்பாவும் விரைவில் குணமடைந்தார்கள். தம்பி பகவதி மட்டும் நீண்ட காலம் ஆஸ்பத்திரியிலேயிருந்து சிகிக்சை பெற்றான். ஆஸ்பத்திரியின் பிரதம கம்பவுண்டர் ரங்கமன்னார் நாயுடுவும், கம்பவுண்டர் ஷண்முக சுந்தரம் பிள்ளையும் இந்தச் சமயத்தில் எங்களுக்குப் பேருதவி புரிந்தார்கள். இதன் காரணமாக அவர்கள் எங்கள் குடும்ப நண்பர்களாகவே ஆகிவிட்டார்கள்.

கம்பெனியில் நடத்திக் கொண்டிருந்த எல்லா நாடகங்களையும் நடித்து விட்டோம். மேற்கொண்டு புதிய நாடகம் ஏதாவது நடத்தினால்தான் வசூலாகும்போல் தோன்றியது. நிலைமை நெருக்கடியாய் விட்டது. வெளியூர்களில் ஸ்பெஷலாகச் சில நாடகங்களை நடத்தினோம். வசூலாகவில்லை. தம்பி பகவதிக்குத் துணையாக அம்மாவையும் ஆஸ்பத்தியிரிலேயே இருக்கச் செய்து விட்டு, நாங்கள் மதுரைக்குச் சென்றோம். மதுரையிலிருந்து எட்டையபுரம் இளையராஜா காசிவிஸ்வநாதபாண்டியன் அவர்கள் வேண்டுகோளின்படி மீண்டும் எட்டையபுரம் சென்றோம். ஒரே ஒரு இரத்தினவளி நாடகம் மட்டும் போடவேண்டும் என்ற ஏற்பாட்டில் தான் போயிருந்தோம். ஆனால் எட்டையபுரத்தார் எங்களை விடவில்லை. தாத்தா மகாராஜா, தங்க மகாராஜா, காசி மகாராஜா ஒவ்வொருவர் அரண்மனை அரங்கிலும் இரத்தினவளி நாடகம் சிறப்பாக நடைபெற்றது. வாத்தியார் கந்தசாமி முதலியாருக்கு எட்டையபுரம் அரசர் ஏராளமான சன்மானங்கள் செய்தார். இரத்னவளியாக நடித்த செல்லத்திற்கு இரண்டு கைக் கொலுசுகள் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்க ஒரு விசேஷம். கலைவாணர் என். எஸ் கிருஷ்ணனுக்கு வைரக்கற்கள் பதித்த தம் கைக்கெடியாரத்தையே காசிமகாராஜா அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார். மற்றும் எல்லா நடிகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பெற்றன.