பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

333



எம். எஸ். திரெளபதி

திண்டுக்கல் முடிந்து தாராபுரம் வந்தோம். தாராபுரத்தில் நல்ல வசூலாயிற்று. ஆனால் நகரசபை அதிகாரிகளின் தொந்தரவு அதிகமாக இருந்தது. அதனால் நீண்ட காலம் நாடகம் நடத்த முடியாமல் திருப்பூருக்கு வந்தோம். திருப்பூரில் எம். எஸ். திரெளபதி எங்கள் குழுவில் சின்னஞ்சிறுமியாக வந்துசேர்ந்தாள். அதற்கு முன்பும் எங்கள் குழுவில் சுசீந்திரம் கோமதி, மீனாட்சி முதலிய நடிகையர் இருந்தார்கள் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். என்றாலும், நீண்டகாலம் பாலர் குழுவில் இருந்த முதல் தர நடிகையாக எம். எஸ். திரெளபதியைத்தான் குறிப்பிட வேண்டும். திரெளபதி நன்றாக பாடுவாள். அவள் முதன் முதலாகப் போட்ட வேடம் பபூன். ‘மஞ்சள் குருவி ஊஞ்ச லாடுதே’ என்னும் பாடலைப் பபூகை வந்து அவள் பாடும் போது சபையோர் தம்மை மறந்து கைதட்டி ஆரவாரிப்பார்கள். இராமாயண நாடகத்தில் குரங்குகளின் நடனம் உட்பட எல்லாக் கோஷ்டி நடனங்களிலும் திரெளபதி கலந்துகொள்வாள். சிறுவர் களிடையே அரைக்கால் சட்டையோடு நின்று கொண்டிருக்கும். அவளைப் பெண்ணாகவே யாரும் எண்ணவில்லை. ஒரே ஒரு பெண்ணை குழுவில் வைத்துக் கொண்டு அவளுக்குப் பிரத்தியேக வசதிகளைச் செய்து கொடுப்பது சிரமமாக இருந்தது. பெரியண்ணா அவளை விலக்கிவிட எண்ணினார். எனக்கு அவள் திறமையில் அபார நம்பிக்கை இருந்ததால் அவள் எதிர்காலத்தில் கம்பெனியின் சிறந்த நடிகையாக விளங்குவாளென்று அண்ணாவிடம் உறுதி கூறினேன். அதன் பிறகு அவளுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. திரெளபதி பிற்காலத்தில் நான் எதிர்பார்த்த படி எங்கள் சபையின் முதல்தர நடிகையாக விளங்கினாள். வீரம், காதல், சோகம் ஆகிய எச்சுவையையும் அதற்குரிய மெய்ப்பாட்டுணர்ச்சியுடன் திறம்பட நடித்துப் பெரும் புகழ் பெற்றாள். குமாஸ்தாவின் பெண், வித்யாசாகரர், ராஜா பர்த்ருஹரி பில்ஹணன், உயிரோவியம், முள்ளில் ரோஜா, அந்தமான் கைதி மனிதன் முதலிய நாடகங்களில் திரெளபதியின் அற்புதநடிப்பை இன்னும் என்னல் மறக்க முடியவில்லை. தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் திரெளபதியின் சிறந்த நாடக நடிப்பினைப் பாராட்டி கலைமாமணி என்னும் விருதினை வழங்கியுள்ளது.