பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தக் கேள்வி கேட்கும் பழக்கத்தை மாத இதழ்கள், வார இதழ்கள் வளர்த்து வந்தன. நான் நடத்திய இளந்தமிழன் வார ஏட்டில் 1973-74 ஆம் ஆண்டில் வெளிவந்த கேள்வி பதில்களின் தொகுப்பே இந்நூல் ஆகும். சிக்கனம் கருதி, கேள்வி கேட்டவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. கேள்விகளை அரசியல், சமயம், மொழி-இலக்கியம், வாழ்க்கை, பொது அறிவு என ஐந்து பகுதிகளாய் பிரித்துத் தொகுத்திருக்கிறேன்.

இந்த அருமையான தொகுப்பு நூலாக வெளிவரக் காரணமாக இருந்தவர் உவமைக் கவிஞர் சுரதா ஆவார். பழைய இளந்தமிழன் இதழ்களைப் புரட்டிப் பார்த்த கவிஞர், இந்தக் கேள்விகளைத் தொகுத்து ஏன் நூலாக வெளியிடக் கூடாது. படிப்பவர்களின் பொது அறிவு வளர இது பயன்படுமே என்று கூறினார்.

கவிஞர் சுரதா கருத்தை உடனே செயற்படுத்தினேன்.

தமிழ் உலகுக்கு ஒரு புதுவகை நூலைப் படைக்கிறேன்.

இக்கேள்வி பதில்களைத் தொகுத்து எழுதிக் கொடுத்த செல்வி ரெங்கேஸ்வரிக்கு என் நன்றி.

நாரா நாச்சியப்பன்