பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xIII

செய்யத்‌ தொடங்கியது. பழந்தமிழ்‌ மக்களின்‌ வாழ்க்கையைப்‌ பற்றிய ஆராய்ச்சிகளை அறிஞர்கள்‌ எமுதத்‌ தொடங்கினார்கள்‌.

இவ்வாறு ஐயரவர்கள்‌ பழந்தமிழ்‌ நூல்களை அச்‌சிடும்‌ தொண்டை விடாது செய்துவந்தார்கள்‌. ஐம்பெருங்‌ காப்பியங்கள்‌ என்று சேர்த்துச்‌ சொல்லும்‌ நூல்களில்‌ கிடைத்த சிலப்பதிகாரம்‌, மணிமேகலை, சீவகசிந்தாமணி என்ற மூன்றையும்‌ அவர்கள்‌ வெளியிட்டார்கள்‌. பத்துப்பாட்டை அவர்களுடைய உழைப்பால்‌ தமிழுலகம்‌ காணமுடித்தது. எட்டுத்தொகைகளில்‌ ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல்‌, புறநானூறு என்பன மலர்ந்தன. பெருங்‌கதை, புறப்பொருள்‌ வெண்பாமாலை, நன்னூல்‌ சங்கர நமச்சிவாயர்‌ உரை என்னும்‌ இலக்கிய இலக்கணங்கள்‌ வெளிவந்தன. இவற்றை யன்றித்‌ திருவாலவாயுடையார்‌ திருவிளையாடற்‌ புராணம்‌, திருக்காளத்திப்‌ புராணம்‌ முதலிய பல புராணங்களும்‌, கோவை, உலா, கலம்பகம்‌, பிள்ளைத்தமிழ்‌, இரட்டை மணிமாலை, அந்தாதி, குறவஞ்சி முதலிய பலவகைப்‌ பிரபந்தங்களும்‌ குறிப்புரைகளுடன்‌ வெளிவந்தன. தம்முடைய ஆசிரியர்‌ இயற்றிய பிரபந்தங்கள்‌ எல்லாவற்றையும்‌ தொகுத்து ஒரு தொகுதியாக வெளியிட்டார்கள்‌.

ஏட்டில்‌ இருக்கிறதை அப்படியே பெயர்த்துக்‌ காகிதத்தில்‌ அச்சிடும்‌ வேலை அன்று, ஐயரவர்கள்‌ செய்தது, புத்தகப்‌ பதிப்பு அவ்வளவு எளிதாக இருந்தால்‌ எத்தனையோ அறிஞர்கள்‌ அதை முன்பே செய்து புகழ்பெற்றிருப்பார்கள்‌. ஏட்டில்‌ உள்ள பாடம்‌ பிழைபட்டிருக்கும்‌; பல இடங்களில்‌ இன்னடதென்றே ஊகிக்க முடியாத அளவுக்குச்‌ சிதைவு உண்டாயிருக்கும்‌; அவற்றையெல்லாம்‌ பல நூல்‌ அறிவினாலும்‌ இயற்கையான அறிவுத்‌ திறமையாலும்‌ விடா முயற்சியினாலும்‌ திருவருளின்‌ துணையாலும்‌ ஆராய்ந்து செப்பம்‌ செய்யவேண்டும்‌. ஐயரவர்கள்‌ திக்குத்‌ தெரியாத காட்டில்‌ நுழைந்து தாமே வழியமைத்துக்‌ காடு நாடாக்கிய பெருந்தொண்டர்‌. அவர்களுடைய பதிப்பு என்றாலே தமிழ்ப்‌ புலவர்களும்‌ ஆராய்ச்சியாளரும்‌ போற்றிப்‌ பாதுகாக்கிறார்கள்‌. ஒவ்வொரு நூலிலும்‌ முன்னே உள்ள

முகவுரையும்‌, ஆசிரியர்‌ வரலாறும்‌, நூலைப்‌ பற்றிய குறிப்புக்‌களும்‌, பிற செய்திகளும்‌ மிதமிக அற்புதமானவை. நூலில்‌ ஒவ்வொரு பக்கத்திலும்‌ அடிக்குறிப்பில்‌ பல வகையான விளக்கங்‌களும்‌ பல நூல்களிலிருந்து எடுத்த ஒப்புமைப்‌ பகுதிகளும்‌ காட்சி தரும்‌. அவை ஐயரவர்களுடைய பரந்த நூற்புலமைக்குச்‌ சான்றாக விளங்கும்‌. இறுதியில்‌ நூலில்‌ கண்ட சொற்களுக்கும்‌ பொருள்‌களுக்கும்‌ அகராதி இருக்கும்‌. ஆசிரியரின்‌ உதவியின்றியே பயிலும்‌ வகையில்‌ அமைந்தவை ஐயரவர்களின்‌ பதிப்புக்கள்‌.