பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவ்வளவு பேர்களுக்கு முன்னால் அங்கே இருப்பதற்குத் துணிவு உண்டாகவில்லை.

என் கருத்தை அறிந்த செட்டியார், “இது திருவாவடுதுறை மடமன்று; இந்த இடத்தில் உட்கார வேண்டியது உங்கள் கடமை” என்று சொல்லவே நான் போய் நாற்காலியில் அமர்ந்தேன். எதிரே இருந்த பெஞ்சில் ஹனுமந்தராவ், ஸ்ரீநிவாசையர், தியாகராச செட்டியாரென்பவர்களும் ஓய்வுள்ள வேறு சில ஆசிரியர்களும் இருந்தனர். அந்த வகுப்பில் எழுபது பிள்ளைகளுக்கு மேல் இருந்தனர். முன் வரிசையில் கவர்ன்மெண்டு ஸ்காலர்ஷிப் பெற்ற இருபது பிள்ளைகள் உட்கார்ந்திருந்தனர். வகுப்பிலிருந்த பிள்ளைகளிற் பலர் என்னைக் காட்டிலும் பிராயத்தில் முதிர்ந்தவர்களாகத் தோற்றினர்.

பாடம் ஆரம்பம்

விநாயகக் கடவுளையும் வேறு தெய்வங்களையும் மனத்தில் தியானித்துக் கொண்டு பாடம் சொல்லத் தொடங்கினேன். நாலடியாரில், “இரவச்சம்” என்னும் அதிகாரத்தை முதலிலிருந்து சொன்னேன்.

மடத்தில் பாடம் சொன்ன பழக்கத்தால் எனக்கு அங்கே சொல்வதில் அச்சமோ சோர்வோ உண்டாகவில்லை. முதற் செய்யுளை சங்கராபரண ராகத்தில் நிறுத்திப் படித்தேன். பள்ளிகூடப் பிள்ளைகளை ஓரளவு சங்கீதத்தால் வசப்படுத்தலாமென்பதை அனுபவத்தால் தெரிந்து கொண்டேன். நான் பாடம் சொல்லத் தொடங்கிய செய்யுள் வருமாறு:

“நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று-தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமும்
தெருண்ட அறிவி னவர்.”

[இதன் பொருள்: ‘இந்த ஏழைகள் நம்மாலே முன்னுக்கு வருபவர்கள்: இவரால் தமக்கோ, நமக்கோ உண்டாகும் லாபம் ஒன்றுமில்லை’ என்று தம் செல்வத்தைப் பெரிதாக எண்ணி மயங்கிய மனத்தையுடையவர்களைப் பின் தொடர்ந்து தெளிந்த அறிவுடையவர்கள் செல்வார்களோ? நல்கூர்ந்தார்- றியவர். ஆக்கம்-விருத்தி. மருண்ட- மயங்கிய, செல்பவோ-செல்வார்களோ? தெருண்ட-தெளிந்த.]