பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/731

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

704

என் சரித்திரம்

என்னும் செய்யுளைச் சொன்னார். நடையிலிருந்து அது சங்கச் செய்யுளாக இருக்குமென்று தோன்றியது.

“இவற்றை எங்கிருந்து தெரிந்து கொண்டீர்கள்?”

“என்னிடம் உள்ள ஏட்டுச் சுவடியில் இத்தகைய பல பாடல்கள் இருந்தன.”

“அப்படியா! அந்தச் சுவடிகளை நான் பார்க்கலாமா?”

“என் வீடு என் ஸ்வாதீனத்தில் இல்லை. என்னிடம் இருந்த சுவடிகள் என் சொத்தோடு பிறர் கையிற் போய் விட்டன.”

நான் ஒன்றை ஆவலோடு எதிர்பார்க்கும்போது அது நிறை வேறாமல் ஏமாற்றத்தை அடைதல் எனக்கு வழக்கமாகி விட்டது. சுப்பையா பிள்ளை சொன்ன பாடல்களும் அவர் முதலிற் கூறிய செய்திகளும், “இதுகாறும் பாராத ஒரு நூலை இன்று பார்க்கப் போகிறோம்” என்ற ஆவலை உண்டாக்கின. அவர் கடன் தொல்லை யால் எல்லாவற்றையும் இழந்து விட்டுத் தலைமறைவாக இருந்தாரென்பதைப் பிறகு அறிந்து மிகவும் வருந்தினேன். அவர் தம் சொத்தை இழந்தாரென்பதற்காக நான் வருந்தாமல், தமிழ்ச் செல்வம் அவர் கையை விட்டுப் போயிற்றே என்பதற்காக வருந்தினேன்.

“அப்படியானால் உங்களிடம் இப்போது ஒரு சுவடியும் இல்லையா? என்று மெலிந்த குரலோடு கேட்டேன்.

“சில ஒற்றை ஏடுகளும் இரண்டொரு புத்தகமும் உள்ளன” என்றார்.

அவற்றைக் காட்டும்படி கேட்டபோது அவர், “ஒரு வீட்டின் மச்சில் வைத்திருக்கிறேன். பகல் நேரத்தில் வந்து எடுத்துக் கொடுக்க முடியாது; ராத்திரி எடுத்து வருகிறேன்” என்று கூறினார்.

அன்று இரவு அந்த ஒற்றை ஏடுகள் அவரிடமிருந்து கிடைத்தன. அவற்றில் ஆறு செய்யுட்கள் இருந்தன.

சிற்றட்டகம் என்ற பழைய நூலைச் சேர்ந்தனவாக இருக்கு மென்று கருதினேன். இன்றளவும் அந்நூல் கிடைக்கவில்லை.

ஒற்றை ஏடுகளைப் பெற்றாலும் ஒரு பெருநூலையே பெற்றது போன்ற மகிழ்ச்சியை நான் அடைந்து சுப்பையா பிள்ளையைப் பாராட்டி விடைபெற்றுக் கொண்டேன். தென்காசியிலிருந்து வேறு சில ஊர்களுக்குப் போய்ப் பார்த்தும் சிலப்பதிகாரப் பதிப்புக்குப் பயன்படும் சுவடிகள் கிடைக்கவில்லை. ஆதலால் திரிகூடராசப்பக் கவிராயரிடம் விடைபெற்றுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.