பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1. என் தமிழ்ப்பணி


என் கடன் பணி செய்து கிடப்பதே!

1932 : செய்யாறு உயர்நிலைப் பள்ளியில் 8-வது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறேன். தமிழாசிரியர், உயர் திருவாளர், மகாவித்துவான் வீரபத்திரப் பிள்ளை அவர்கள். எங்கள் ஊரில் பானு கவியார் என்ற பெரும் புலவர், துறவியார் இருந்தார். வடலூர் வள்ளலார் இயற்றிய அருட்பா குறித்து எழுந்த “அருட்பா, மருட்பா’ வாதத்தில் அருட்பாவாத நெறியாளரோடு நின்று வாதிட்ட வன்மையாளர். எங்களூரில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு வேதபுரீஸ்வரர், திருஞான சம்பந்தர் அவர்களால், ஆண்பனை பெண்பனையாகப் பாடப்பெற்ற பெருமைக்குரிய பெருமான். அவர் துணைவியார் பாலகுஜாம்பிகையார், அந்த அம்மையார் மீது “இளமுலைநாயகிப் பிள்ளைத் தமிழ்” என்ற பொருள் செறிந்த நூலைப் பாடியவர் பானுகவியார். அத்தகு பெரும் புலமை வாய்ந்த பானுகவியாரை வாதத்தில் வென்றவர் திரு வீரபத்திரப்பிள்ளை அவர்கள்.

அவர் வேலூரில், இன்று வெங்கடேசுவரா மேல்நிலைப்பள்ளி என அழைக்கப்பெறும் அன்றைய ஸ்ரீமசுந்து தேவஸ்தான உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று விட்டார்.


புலவர் அவர்கள் கடைசியாக எழுதிய கட்டுரை.