பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

10



எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 'இடமாவது, வழுவாவது அமைதியாவது, தனித்தன்மைப் பன்மையாவது” என விழித்தோம். அதன் பிறகு இவரிடம் நல்ல தமிழ், அறிவு இருக்கிறது என்பதை உணர்ந்து மதிக்கத் தொடங்கினோம்.

வகுப்பில் ஒருநாள் “என்னிடம் தமிழ் கற்க விரும்பும் மாணவர்கள் எழுந்து நிற்கலாம்” என்றார். எல்லோரும் எழுந்து நிற்கவும், உடனே அவர், என்னிடம் படிப்பதானால், மாதம் ஐந்து ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும்! அதற்கு ஒப்புக் கொள்பவர் மட்டுமே நிற்கலாம் என்றார். நான், மா. கந்தசாமி, வ. வேதபுரி, பி. குப்புராவ், ஆகிய நால்வர் மட்டுமே நின்றோம்.

மாலையில் வீட்டிற்குச் சென்றோம் பணத்தோடு! தமிழ் கற்க எந்த அளவு ஆர்வம் இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளவே, ஐந்து ரூபாய் சம்பளம் என்றேன். சம்பளம் எதுவும் வேண்டாம் தமிழ் கற்றுத் தருகின்றேன் என்றார்.

வகுப்பு தொடங்கிற்று. திரு. உலகநாதம் பிள்ளை அவர்கள் இயற்றிய ‘கன்றும் கனி உதவும்’ என்ற உரைநடை நூலைக் கொடுத்து, அதை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப் பணித்தார். பாரி மகளிர் வரலாறு கூறும் சிறந்த உரைநடை நூல் இது. அது முடிந்ததும் "கார் நாற்பது", "களவழி நாற்பது" என்ற எளிய பொருள் விளக்கம் பெறவல்ல, அதே நிலையில் ஆழமான பொருள் நிறைந்த நூல்களைக் கற்றுத் தந்துவிட்டுப், பின்னர் ஒருநாள். தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், ஒரு நாள் திருக்குறள் பரிமேலழகர் உரை எனச் சொல்லித்தந்தார்.