பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10. இனத்து இயல்பாகும் அறிவு

நிலம் பெயராப் பொருள்களாம் மரம், செடி, கொடிகளும், நீர்வாழ்வனவும், பறப்பணவும், நிலத்தில் ஊர்வனவும் நடப்பனவும் ஆகிய அனைத்தும், உயிர் உடைய பொருள்கள் என்ற ஒருமைப்பாட்டால் ஓர் இனம் எனக் கருதப்படினும், அவ்வுயிரினம் அனைத்திலும் மனித இனம் உயர்வுடையது எனக் கருதப்படுவதற்குக் காரணமாய் நிற்பது மனித இனம் பெற்றிருக்கும் பகுத்துணர் அறிவே ஆகும்.

தக்கனவும், தகாதனவும், ஏற்பனவும் மறுப்பனவும் கலந்தே காட்சி அளிக்கும் உலகில், தக்கன இன்ன தகாதன . இன்ன, ஏற்பன இன்ன மறுப்பன இன்ன எனத் தெளிவாக உணர்ந்து தக்கனவும் ஏற்பனவும் கொண்டு, தகாதனவும் மறுப்பனவும் கைவிடித் துணைபுரியும் அறிவினைப் பெற்றிருப்பதினாலேயே, மனித இனம் ஏனைய உயிரினத்தினும் சிறந்து விளங்குகிறது. ஆகவே, மனித இனத்திற்குச் சிறப்பளித்து நிற்கும் அவ்வறிவு மாசு படாப் பெருமை யுடையதாக இருக்கவேண்டும் என்பது இன்றியமையாதது. மனித இனத்திற்கு மாண்புதரும் அவ்வறிவு, அம்மனித உணர்வு, தான் விரும்பும் பொருள் மீதெல்லாம் சென்று அலைந்து கெட்டொழியாவாறு அனைபோட்டுத் தடுத்து, நல்லன்வற்றின் மீது மட்டுமே நாட்டம் கொள்ளத் துணை நிற்றல் வேண்டும். அந்நிலையில்தான் அது அறிவு எனப்படும்; அதுதான் அதற்கு அழகும் இயல்பும். “சென்ற இடத்தால் செலவிடாது தீது ஒரிஇ, நன்றின்பால் உய்ப்பது அறிவு” என வள்ளுவர் வகுக்கும் அறிவின் இலக்கணம் காண்க.

என்-5