பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

187



சுந்தரத்தோழரும், மகாத்தோழரும், ஒரு மையத்தில் ஒள்றித்தது போல் நானும் கலைஞரும் ஒன்றிக்கிறோம்.

இப்படிக் குறிப்பிடுவதால், கலைஞரை நான் ஆண்டவனாக உயர்த்தி, அந்தச் சாக்கில் என்னையும் ஒரு நவீன சுந்தரராக ஆக்கிக் கொள்வதாக பொருட்படுத்தலாகாது. என்னளவில் தம்பிரான் தோழர் என்று நான் அழைப்பதற்கு கொடுக்கப்பட்ட விளக்கமே இது. ஆகையால், வரிகளுக்குள் வரி தேடலாகாது. கலைஞர் கூட இதைப்பற்றி என்னிடம் கேட்கவில்லை. இதன் முழுத்தாக்கம் அவருக்குத் தெரியாமலும் இருக்காது.

இந்த விளக்கத்தினால் கலைஞரை விமர்சிக்கக் கூடாது என்றும் பொருளல்ல. தொடர்ந்து விமர்சிப்பேன் என்பதற்குதான் இந்த பட்டமே. ஆனால் அது, அவரையும் தமிழகத்தையும் மேன்மைப் படுத்துவதற்காக மட்டுமே.

கலைஞர், என்னைப்போல் எளிய வர்க்கத்தில் இருந்து புறப்பட்டவர். பொதுவாக இளமையில் மனக்காயங்களை உள்வாங்கிக் கொண்ட ஒருவருக்கு இரண்டு தனித்துவக் குணங்கள் இருக்கும். முதலாவதாக அந்தச் சிறுவன் இளைஞராகும் போது பரமசாதுவாக மாறலாம். வாழ்நாள் முழுவதும் இந்தச் சாதுத்தனம் நீடிக்கலாம். இரண்டாவதாக அந்த இளைஞர் தீவிரவாதியாக மாறலாம். இந்த இரண்டில் ஒன்றுதான் அவனுக்கு இருக்க முடியும். ஆனால், கலைஞருக்கோ அல்லது எனக்கோ இந்த இரண்டும், தக்க விகிதாச்சாரத்தில் இருக்கின்றன என்றே கருதுகிறேன். இந்த இரண்டையும் முறியடித்துக் கொண்டு அவர் வீறிட்டிருக்கிறார் என்பதே என் கருத்து.

1969 ஆம் ஆண்டில், முதல் தடவையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது கலைஞர், தன்னை ஒரு கட்சித் தலைவராக அனுமானித்தார். பெருந்தலைவர் காமராசரை முறியடிப்பதற்காக இந்திராவுடன் கூட்டமைத்து அவர் முதலமைச்சர் பதவியை உறுதி செய்துக் கொண்ட போது ஒரு அரசியல்வாதியாகவே தன்னை நினைத்துக் கொண்டார். 1989ல் பதவியேற்றபோது, ஒரு ஒரு தாயகத் தமிழனத் தலைவராக பொறுப்பேற்றார். இப்போது - அதாவது 1996ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற நாளிலிருந்து அவர் எல்லாமாகி, எல்லாமும் அல்லது மாகி அரசியலில் கிட்டத்தட்ட பூரணத்துவத்தை எட்டிவிட்டார் என்றே கருதுகிறேன். இல்லையானால் செல்வி ஜெயலலிதாவை அவர் எதிர்நோக்குகிற விதமே வேறு விதமாக இருக்கும்.