பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

53



ஆனால், என்னால் அப்படி இருக்க முடியவில்லை. பழனி ஆயிரம் சொன்னாலும் கலைஞருக்கு எதிரான என் வன்மம் கூடியதே தவிர, குறையவில்லை. இவ்வளவுக்கும் கலைஞருக்கு இந்த சமுத்திரத்தைப் பற்றியே தெரியாது. தெரிந்தாலும் ஒரு பொருட்டல்ல. ஆனாலும், கலைஞரை வெறுப்பதை ஒரு சமூக கடமையாகவே நான் நினைத்தேன்.

புதுடில்லியில் இருந்து விடுமுறையில் வந்தபோது, அப்போதைய மவுண்ட் ரோடு வழியாக நண்பர்களோடு நடந்துக் கொண்டிருந்தபோது, ஒரு கார், முன்நோக்கிப் போய்க் கொண்டிருந்தது, ஒரு நண்பர், அந்தக் காரில் முன்னிருக்கையில் கலைஞர் போவதாகக் குறிப்பிட்டடார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனந்தமாக பின்னிருக்கையில் இரண்டு பக்கமும் பறவைகளின் இறக்கை மாதிரி கைகளைப் போட்டுக் கொண்டு அமராமல், முன்னிருக்கையில் உட்கார்ந்து, சடன் பிரேக்கில் முகம் கண்ணாடியை இடிக்கக் கூடிய நிலையில் அவர் ஏன் அப்படி போனார் என்பது புரியவில்லை. இதுதான் கருணாநிதியின் இயல்போ என்று அப்போது வியந்துக் கொண்டேன்.