பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

முடியரசன்


வாய்ந்த இடம், வழிபடற்குரிய இடம் என்று எண்ணினான். அதனை படுத்துதல் தகாது எனக் கருதினான். ஆதலால், அம் மண்டபத்தைப் பேணுக என்றனன். தமிழ், சோழனுக்கு மட்டும் உரியதன்று, நமக்கும் உரியது; அதனால் அது எங்கிருந்தாலும் வாழ்தல் வேண்டும்; மதிக்கப்படுதல் வேண்டும் என்று எண்ணினான். இதனால் மாறன் தமிழின்பாற் கொண்ட பற்றும் தமிழின்பாற் கண்ட இன்பமும் நமக்குத் தெரிகின்றன. அதுமட்டுமன்று; நமக்குப் பாடமாகவும் அமைகிறது, அவன் செயல். பகைமை காரணமாக நமக்குப் பொதுவான ஒன்றை இழந்துவிடுதல் கூடாது என்னும் பாடந்தான் அது.

இம் மாறனுடைய செயலைத் திருவெள்ளறைக் கல்வெட்டிலுள்ள ‘வெறியார் தளவத் தொடைமாறன்’ எனத் தொடங்கும் பாடல் நமக்கு உணர்த்துகிறது. அப்பாடலில்,

“பறியாத தூணில்லை, கண்ணன்செய் பட்டினப்
பாலைக்கு, அன்று
நெறியால் விடுந்தூண் பதினாறுமேசுங்கு

நின்றவே”

என்ற பகுதி மண்டபம் காக்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கின்றது.

“பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப்

பசுங் கொண்டலே”

எனக் குமரகுருபரரும் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழிற் கூறுகிறார். திருமழிசை யாழ்வாருடைய பாடலைக் கேட்டதும் திருமால் தமது பைந்நாகப்பாயைச் சுருட்டிக் கொண்டு ஆழ்வாருக்குப் பின்னே ஓடுகிறார். அவருக்குப் பின்னே அவர் துணைவியார் திருமகளும் தொடர்கிறார். தமிழுக்குப்பின் திருமால் ஓடக் காரணமென்ன? அத் தமிழ் தந்த இன்பமன்றோ? தமிழின்பம் ஆண்டவனை ஆட்டிப் படைக்கவல்லது; அரசரை ஆட்கொண்டு தன்வயப்படுத்தவல்லது. அடியவரை அகங்களிக்கச் செய்யவல்லது; மக்களுக்குக் களிப்பூட்டிச் சோர்வகற்றித் தெம்பூட்டவல்லது.