பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 முதன்முறையாக அவர் பாகவதரைச் சந்தித்த போது, 'எங்கே ஒரு பாட்டு பாடுங்கள் என்றார் வினயத்துடன். 'சிவபெருமான கிருபை வேண்டும்! வேறென்ன வேண்டும்? சிவபெருமான் கிருபை வேண்டும்!" என்று வழக்கமான புன்னகையுடன் ஆரம்பித்தார் பாகவதர். 'யாருக்கு 'என்று திடுக்கிட்டுக் கேட்டார் அண்ணாதுரை. 'உங்களுக்குத்தான்!” என்றார் பாகவதர், அவருடைய ஆட்சேபம் புரிந்தும் புரியாதவர்போல். 'எனக்கு அவருடைய கிருபை வேண்டாம்; அது உங்களுக்கே இருக்கட்டும்' என்றார் அண்ணாதுரை. மென் சிரிப்புடன். பின்னால் ஆஸ்திகர்களையும் ஓரளவாவது கவர வேண்டும் என்பதற்காக ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று அவர் தம் கொள்கையைச் சற்றே மாற்றிக்கொண்டு விட்டாலும் அதற்கு முன்னால் அவர் திரு ஈ.வே.ரா.வின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி நாஸ்திகராயிருந்தது தான் நமக்கெல்லாம் தெரியுமே? அதனால் அவர் அப்போது 'சிவபெருமான்கிருபையை விரும்பவுமில்லை வேண்டவு மில்லை. இதைப் புரிந்துகொண்ட பாகவதர், அத்துடன் அந்தப் பாடலை விட்டுவிட்டு, ' மெஞ்ஞானத் தங்கமிது, மேலான தங்கமிது, அஞ்ஞானத் தங்கமெல்லாம் என் தங்கமே, அநித்திய தங்கமடி, ஞானத் தங்கமே! " என்று ஆனந்தமாகப் பாட ஆரம்பித்தார்; அண்ணாதுரையும் அதைப் பரவசத்துடன் கேட்டு அனுபவித்தார். பாட்டு முடிந்தது; 'வேதநாயகனைப் பிடிக்கா விட்டாலும் வேதாந்தத்தைப் பிடிக்கும் போலிருக்கிறதே உங்களுக்கு என்றார் பாகவதர்.