பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

எல்லாம் தமிழ்

கடமையென்று உணர்ந்து, எப்படியாவது அவர்கள் காரியத்தை நிறைவேற்றிவிட உறுதி பூண்டார்.

"சோழ நாட்டின் பெருமையை என்னவென்று சொல்வது? தமிழ் நாட்டுப் பேரரசர் மூவர். அந்தத் தண்டமிழ் அரசர் மூவருக்குள்ளும் அரசு என்பதற்குரிய இலக்கணங்களெல்லாம் நிரம்பியவன் நீதான். சோழ நாடு வளத்திலே சிறந்தது. மழையில்லாமல் பிற நாடுகளெல்லாம் பஞ்சத்தால் துன்புறும் காலத்திலும் காவிரி வற்றாமல் ஓடுவது. அதன் நீரால் சோழ நாடு வளம் பெறுகிறது. வேற்று நாட்டான் ஒருவன் இந்த நாட்டுக்கு வந்து பார்த்தால், இங்கே காடு போலப் பரந்திருக்கும் கரும்பைக் கண்டமாத்திரத்திலே இந்த நாட்டின் செழிப்பை உணர்ந்துகொள்வான். வறுமைப் பகைவனை வதைக்கும் வேலைப் போல வெள்ளைப் பூவோடு தலை நிமிர்ந்து நிற்கும் கரும்பின் காட்சியே காட்சி" --இவ்வாறு நாகனார் சோழ நாட்டின் வளத்தை எடுத்துச் சொல்லச் சொல்லக் கிள்ளிவளவன் கேட்டுக்கொண்டே வந்தான்; கேட்கக் கேட்க அவன் உள்ளம் பெருமிதம் அடைந்தது.

"இத்தகைய செல்வம் மிக்க நாட்டுக்கு அரசனாக இருக்கும் உனக்கு ஒன்று கூற விரும்புகிறேன்" என்று புலவர் நிறுத்தினர்.

"அப்படியா? சொல்லுங்கள் கேட்கிறேன். என்னால் ஆகவேண்டியது எதுவானாலும் செய்கிறேன்" என்றான் அரசன்.

"காவிரிக்கு நீர்வளம் மழையால் உண்டாகிறது. நாம் நினைத்தபோது நினைத்த காரியத்தை ஓரளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/38&oldid=1529095" இலிருந்து மீள்விக்கப்பட்டது