பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'எழுத்து'வும் புதுக்கவிதையும்
வல்லிக்கண்ணன்


புதுக்கவிதை புதிய மறுமலர்ச்சியும் இயக்க வேகமும் வலிமையும் பெறுவதற்கு 'எழுத்து' தோன்ற வேண்டியிருந்தது.

சி.சு. செல்லப்பா 1959 ஜனவரியில் 'எழுத்து' மாசிகையை ஆரம்பித்தார். அப்போது அவர் புதுக்கவிதை சம்பந்தமாகத் தீவிரமான கொள்கைகளோ, ஆசை நிறைந்த எதிர்பார்ப்போ, ஆர்வம் மிகுந்த திட்டமோ கொண்டிருந்தார் என்று சொல்வதற்கில்லை.

அப்படி ஏதேனும் இருந்திருந்தால், அது அவசியம் முதல் இதழின் ஆசிரியப் பிரகடனத்தில் ஒலிபரப்பப்பட்டிருக்கும். 'எழுத்து' முதல் ஏட்டில் மட்டுமல்ல, முதல் வருடத்தின் எந்த ஏட்டிலுமே புதுக்கவிதை சம்பந்தமான அபிப்பிராயம் எதுவும்ஆசிரியர் பக்கத்திலோ கட்டுரையாகவோ, அல்லது படைப்பாளிகளின் அபிப்பிராயமாகவோ-பிரசுரிக்கப்படவில்லை.

5-வது இதழ் 'கு.ப.ரா. நினைவு ஏடு. அதில் கு.ப.ராபற்றி பலர் எழுதிய கட்டுரைகளோடு, கு.ப.ரா. படைப்புகள் ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை, ஒரு விமர்சனம், ஐந்து கவிதைகளும் சேர்க்கப்பட்டன. கட்டுரை, 'வசனகவிதை’ என்ற தலைப்பில் கு.ப.ரா. ‘கலாமோகினி'யில் எழுதியிருந்தது ஆகும்.

‘முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரிகையை ஒரு சோதனை முயற்சியாக நடத்த வேண்டும் என்ற எண்ணமே செல்லப்பாவிடம் மேலோங்கியிருந்தது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட சோதனை முயற்சியில், 'இலக்கிய அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்வதுதான்' முக்கியப் பணியாக இருக்க வேண்டும் என்ற நோக்கமும் அவருக்கு இருந்தது என்றும் கொள்ளலாம்.

“எழுத்து இலக்கியக் கோட்பாடுகள் தத்துவக் கோட்பாடுகள் சம்பந்தமாக திறந்த கதவாகத்தான் இருக்கும். கருத்துப் பரிமாறுதல்களின் விளைவாகத்தான் இலக்கியப் படைப்பும் ரசனையும் ஏற்பட முடியும் என்ற நம்பிக்கையை எழுத்து தன் முன் வைத்துக்கொண்டுள்ளது" என்று முதல் ஏட்டில் அறிவித்துள்ளது.

204