சிட்டி
மானிடன் முதலில் தோன்றி
மரக்கிளை வாசம் செய்து
கானிடைத் திரிந்தபோது
கருத்தழியாதிருந்து வந்தான்
பெண் வந்தாள் பார்த்து நின்றான்
பேச ஒரு மொழி செய்து
கண்கண்ட உண்மைக் கெல்லாம்
கருத்தாலே கலர் கொடுத்தான்
தவிதவித்துத் தத்தளித்துத்
தற்குறிப்பால் தள்ளாடி
கவிதையெனக் குழம்பியதன்
கற்பனைக்குப் பெயரிட்டான்
நாளடைவில் இசைகுறைய
நாப்பழக்கம் நயம்இழக்க
தாளிட்ட கதவின் பின்
தத்துவம் பலபேசி
பழுத்தோர் சிந்தனையின்
பல்வேறு ஒலியெல்லாம்
எழுத்தென்ற ரூபத்தில்
ஏட்டிலே பொறித்துப்பின்
கட்டுரை நடையாடிக்
கவிதைக்குப் பொருள்தேடி
தொட்டும் தொடாததுமாய்
தொல்கலைக் கையாண்டு
கதையென்ற வடிவத்தைக்
காணாத புதுமையென
வளைத்துச் சிதைத்திட்டான்
வளைவெல்லாம் உத்தியென்றான்
இலக்கியம் செய்வதென்றால்
எளிதில்லை எழுத்தாளா!
கலக்கினால் கவிரியும்
கழிவு பொருள் பலகாட்டும்.