மருதம்
151
அவளைத் தனக்கேற்ற காதன்மைக்குரிய பெண்டு என்று எண்ணி அவன் எவ்வாறு அவளிடத்தே ஒழுகுகின்றான் அல்லன். அவள் தன் மனைவியாக (மனைப்பாங்கின் தலைவியாக) ஒழுகும் அந்தப் பண்பினைக் கருதியே, அவளுக்குத் தலையளிசெய்து, தன் கடமையாற்றுகின்றான்!
கருத்து: 'அவன் என்னிடத்தேயே பெருங் காதலுடையான்' என்றதாம்.
சொற்பொருள்: 'எவ்வை’ தலைவியைக் குறித்தது. அளித்தல் - கூடியின்புறுதலாலே அவளுக்கு இன்பமும் மனநிறைவும் அளித்து உதவுதல். பெண்டு - காதற்பெண்டு. பண்பு - மனைவியாம் இல்லறத் தலைமைப்பண்பு.
விளக்கம் : தலைவிபால் காதலன்பு ஏதும் பெற்றிலன் எனினும், தன் மனையறம் செவ்விதாக நிகழும் பொருட்டாகவும், ஊரவர் பழியாதிருக்கவும். அவள் தன்பாற் கொண்டுள்ள பற்றுதல் நீளவும், அவளுக்கும் தலைவன் தலையளி செய்வான் என்பதாம். ஆகவே, மீளவும் தன்பால் வருவான்; தலைவி அதுபற்றிய நினைவோடிருப்பாளாக என்று எச்சரித்ததாம்.
உள்ளுறை: 'பழனத்து வண்டு தாதூதும் ஊரன்' என்றது, அவ்வாறே பொதுமகளிர் சேரியிடத்தேயுள்ள இளம் பரத்தையரை ஒருவர் ஒருவராக நாடிச்சென்று இன்புறும், காமங் கட்டவிழ்ந்த இயல்பினன் தலைவன் என்று கூறியதாம்.
பாட பேதம் : 'வேண்டென விரும்பின்று' எனவும் பாடம்; இப்பாடத்திற்கு, அவளை விரும்பியொழுகு என்று வாயில்கள் வேண்ட, அவன் அவளைச் சென்றுகூடித் தலையளி செய்தனன் என்று பொருள் கொள்ளுக.
90. யார் குணம், எவர் கொண்டது?
துறை : தலைமகன், தன் மனைக்கண் செல்லாமல் தான் விலக்குகின்றாளாகத் தலைமகள் கூறினாள் என்பது கேட்ட காதற்பரத்தை, தலைமகன் கேட்குமாற்றால், அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
[து. வி.: *தலைமகன், தன்னை விரும்பி வராமற்படிக்குத் தடுப்பவள் காதற் பரத்தையே' என்று, தலைமகள், ஒருநாள்