பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தலைமை உரை

காப்பியங்கனின் விருத்த ஓசையிலும் கற்பனாலங்கார வருணனையிலும் கட்டுண்டு பண்டைத் தமிழ்ப்பாட்டுக்களே தமிழர் தனிமாண்பினை நனி புலப்படுத்தும் உரைகல் என்பதனைச் சிறிதும் ஓராது, தொகைநூல்களைப் பகைநூல்களைப்போற் கருதி, "இந்நூல்களைக் கற்பதாற் போர்த பயன் யாது கரும்பு போன்ற காப்பியக் கவிதைகளை விரும்பாது இரும்பு போன்ற இப்பழம் பாட்டுக்களை விரும்புவது எற்றிற்கு கடல் வாய்மடுத்து எஞ்சிய இப் பாட்டுக்களையும் கடலவாய்ப்படுத்தலே நம் கடன்" என மொழிந்து வருகின்றனர். இவர்கள் இதனோடு அமையாது கன்னித்தமிழ் வளர்ப்போம் என்று, மாநாடு கூட்டி அம்மேடைகளில் எழுத்தறிவில்லாத மாந்தர் பேசும் இழிமொழிகளையும் வேண்டா வடமொழிகளையும் இடைமடுத்துப் பேசித் தமிழ்மொழியின் மாண்பினையும் மரபினேயும் சிதைத்து வருகின்றனர். மேலும் இவர்கள் பண்டிதர் நடை, பண்டிதர் பேச்சு என்று தமிழாசிரியர்களை வேறு பிரித்துத் தாங்கள் பெற்றிருக்கும் தமிழறிவும் அவர் களால் தரப்பெற்றதே என்பதனை அறவே மறந்தவர்களாய், அவர்களை ஏச்சுரைகளால் இயல்கெடப் பேசியும் எழுதியும் வருகின்றனர். தாங்கள் வியக்கும் பிற்காலக் காப்பியக் கவிஞர் பாக்களுக்கெல்லாம் கருவாக இருப்பதும் தமிழ்ப் பழம் பாட்டுக்களே என்பதனையும், அப்பாட்டுக்களின் இயற்கை நலன்கணிந்தொழுகும் இனிமையினையும், பொருளாழத்தினையும், மொழிவளத்தினையும், இவர்கள் நன்கு அறியாதவராவர். இம்பர் நாடெல்லாம் பம்பு புகழ்படைத்த கம்பநாடரும் தமிழ்மொழியில் பல்லாற்றானும் சிறக்க பாட்டுக்கள் எனப்படுவன சங்க காலத்து நல்லிசைப் புலவர்கள் யாத்த செந்தமிழ்ப் பாக்களே என்னும் தமது சிறந்த கருத்தினைத் தம் காப்பியத்துள் கோதாவிரியாற்றினைச் சிறப்பித்துக் கூறுமிடத்தில், சிலேடை முகத்தால்,

'புவியிலுக் கணியாய் ஆன்ற் பொருள் தந்து புலத்திற்றாகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றோச் கவியெனக் கிடந்த கோதா விரியினை வீரர் கண்டார்.”