பக்கம்:ஒத்தை வீடு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 101 "நல்லாத்தான் குணமாகி வந்தாங்க.. ஆனால் இந்தம்மா. ஒங்கம்மாவா. நல்ல அம்மா. இவங்க, இந்த ரெண்டுபேரையும் படுத்தின பாட்டுல பாவம் ஒங்க மனைவிக்கு பழையபடியும் கைகால் வெட்டிட்டு" டாக்டர் மேற்கொண்டு பேசமுடியாமல் வாயடைத்துப் போனார். மனோகரின் மாமியாரும், மாமனாரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு விம்மினார்கள். அதுவும் நல்லதாய்ப் போயிற்று. தனித்தனியாய் அழுதிருந்தால் கீழே விழுந்திருப்பார்கள். ஒருவரையொருவர் எதுவும் பிடிபடாமல், பிடித்துக் கொண்டார்கள். ஒருவர் தோளில் இன்னொருவர் முகம்போட்டு முதுகுகளை ஈரமாக்கினார்கள். தலைகள் இறங்கி முண்டமான இரு உடம்புகளாய் ஆகிப்போனார்கள். மனோகர், பொங்கிய கோபத்தை திசை திருப்பினான். எதிர்மறை உணர்வை ஆக்கமாக்கினான். அம்மாவின் தோளில் கை போட்டபடியே அவள் முகத்தைத் தூக்கிப்பிடித்து நெகிழ்ந்து பேசினான். "எம்மா. ஒன் மகளாயிருந்தால், இப்படிப் பேசுவியா..? இவங்க ஒன் தம்பி தங்கச்சியாயிருந்தால், இப்படி நோகடிப்பியா? ஒன்னையும் என்னையும் நம்பித்தானேம்மா சங்கரியை ஒப்படைத்தாங்க. ஏம்மா இந்த மாதிரி எல்லாரையும் நோகடிக்கிறே. அக்காவுக்கு, சங்கரி மாதிரி வெட்டு வந்திருந்தால், நீ அவள் புருஷனை விட்டு வைப்பியா. என் பெண்டாட்டியையும் ஒன் மகளா நெனச்சுப் பாரும்மா." சொர்ணம்மா, கண்களால் அரைவட்டம் போட்டாள். விழி பிதுங்கப் பார்த்தாள். பிறகு முகத்தை முடிக் கொண்டாள். உச்சிமுதல் பாதம்வரை குலுங்கியது. காந்தாமணி அவள் கைகளைப் பிடித்தபோது, அம்மாக்காரி அவள் தலையில் முகம்போட்டு மருவினாள். ஊமை அழுகையாய் அழுதாள். மகன் அப்படிப் பேசிவிட்டானே என்று அழுகிறாளா. மருமகள் பழையபடியும் வீட்டுக்கு வருவது நிச்சயம் என்று நினைத்து அழுகிறாளா. அல்லது அன்று முதல் இன்றுவரை தான் நடந்து கொண்டதைப் பற்றி குற்ற உணர்வில் அழுகிறாளா, குற்றஞ்சாட்டி அழுகிறாளா. அந்த சொர்ணமாவுக்கே அது தெரியாது. இதற்குள் டாக்டர் அதட்டுவதுபோல் பேசினார். இடத்தை காலிபண்ணுங்கம்மா. வேடிக்கை பார்க்காங்க பாரு. இப்போ அந்தப் பொண்ணுக்கு டைசிபார்ம் ஊசி போட்டுட்டு, வந்திருக்கோம். இன்னும் நாலுமணி நேரம் அரை மயக்கத்திலேயே இருப்பாங்க. அப்பா அம்மா மட்டும் இங்கேயே இருக்கட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/102&oldid=762153" இலிருந்து மீள்விக்கப்பட்டது