பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௨

ஒப்பியன் மொழிநூல்

தலைக்கழக இருக்கையாகிய மதுரையின் பெயரை எங்ஙனம் பிற்காலத்தில் வடநாட்டிற் கம்சன் ஆண்ட நகர் பெற்றதோ, அங்ஙனமே துவரையென்னும் தென்னாட்டு நகர்ப்பெயரையும் கண்ணன் ஆண்ட வடநாட்டு நகர் பெற்ற தென்க. பண்டைத் தமிழகம் குமரிநாடென்பதையறியாமையாலேயே, மேற்கூறிய தவறுகளும் அன்னோரன்ன பிறவும் நிகழ்கின்றன. முதலில் வடநாட்டிற் குடியேறினவர் திராவிட ரேயாதலின், தங்கள் நகர்களுக்குத் தென்னாட்டுப் பெயர்களையிட்டனர் என்க.

மேற்கூறிய புறநானூற்றுச் செய்யுளில், இருங்கோ வேளுக்குப் புலிகடிமால் என்றொரு பெயர் வந்துளது. டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் அச் செய்யுளின் அடிக்குறிப்பில்,

“தபங்கரென்னும் முனிவர் ஒரு காட்டில் தவஞ் செய்கையில் ஒரு புலி அவர்மேற் பாய்தற்கு நெருங்க, அது கண்ட அம் முனிவர் அங்கு வேட்டையாடி வந்த சளனென்னும் யாதவ அரசனை நோக்கி, 'ஹொய்ஸள' என்று கூற, அவன் அப் புலியைத் தன்னம்பால் எய்து கடிந்தமையால், ஹொய்ஸளனென்றும் புலிகடிமாலென்றும் வழங்கப் பட்டானென்று சிலர் கூறுவர்; சசகபுரத்தை யடுத்த காட்டி லுள்ள தன் குலதேவதையான வாஸந்திகா தேவியைச் சளனென்னு மரசன் வணங்கச் சென்ற போது, புலியால் தடுக்கப் பட்டு வருந்துகையில், அக் கோயிலி லிருந்த பெரியவர் அவனை நோக்கி 'ஹொய்ஸள' என்று கூறி ஓர் இரும்புத் தடியை அருள, அவன் அதனைக் கொன்றமைபற்றி'ஹொய்ஸளன்' என்றும் 'புலிகடிமால்' என்றும் பெயர் பெற்றனனென்று வேறு சிலர் கூறுவர்” என்று வரைந்துள் ளார்கள். இவை கல்வெட்டுச் செய்திகள்.

இதனால், இருங்கோவேளின் மரபினர் ஹொய்சளர் என்பதும், அவ் வேள் ஒருமுறை ஒரு புலியைத் தன் குடிகட்குத் துன்பஞ் செய்வதினின்று விலக்கினான் என்பதும், பிற்காலத்தில் ஹொய்சளன் என்னும் பேருக்குப் பழங்காலக் கதை சற்றுப் பொருத்திக் கூறப்பட்ட தென்பதும் அறியப்படு மேயன்றி, புலிகடிமாலே ஹொய்சளக் குடியினன் என்பது பெறப்படாது, காலவிடையீடு பெரிதாயிருத்தலின்.[1]

இனி, புலிகடிமால் என்னும் பெயராலும் ஹொய்சள என்னும் பெயராலும் சுட்டப்பட்ட கதைகள் வெவ்வேறாகவு


  1. 1.Ancient India,pp.228,229.