பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

ஒரு கோட்டுக்கு வெளியே ...



பதட்ட நிலை தணிந்து சகஜ நிலை வந்தது. மாரிமுத்து நாடாரிடமும், பலவேச நாடாரிடமும் மாறிமாறிக் கடன் வாங்கி, அடைக்க முடியாமலும், கோட்டுக்குள் அடைபட விரும்பாமலும், சீட்டு விளையாடுவதற்காகச் சிலமணி நேரங்களைச் செலவிடும் ஒருவர், இன்னொரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

"ஆமா. நீங்கரெண்டு பேருமே பெரிய மனுஷங்க. ஒண்ணுக்குள்ள ஒண்ணு, கண்ணுக்குள்ள கண்ணு. பேசாம சரோசாவ தங்கப்பழத்துக்கு முடிச்சிடுங்க, என்ன நான் சொல்றது? நீரு யாரு? அவரு யாரு? எல்லாம் ஒண்ணுள்ள ஒண்ணு."

மாரிமுத்து நாடாரும், பலவேச நாடாரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். பிறகு ஜோடியாகப் பேசிக்கொண்டே போனார்கள்.

டீக்கடையில் எஞ்சியிருந்தவர்களில் ஒருவர், கொஞ்சம் பயந்து கொண்டே சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு 'பெரிய இடத்து' ஆட்கள், அப்போது அங்கே இல்லை என்று தீர்மானித்ததும், திருமணத் தீர்மானம் கொண்டு வந்தவரை அதட்டினார்.

"நீ எவண்டா இவன். அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டா நாம சின்னாபின்னமாயிடுவோம். இது தெரியாம மடத்தனமா பேசுறிய. அறிவிருக்கா?"

அவர் சொல்வதில் மிகப் பெரிய உண்மை இருப்பதுபோல், கூட்டத்தினர் மௌனமாக, மசால்வடைகளைத் தின்று கொண்டிருந்தார்கள்.

13. ஊர்ச்சபை முன்னால்....

ருமாத காலம், ஊரார்க்கு வேகமாகவும், உலகம்மைக்கு மெதுவாகவும் ஓடித் தீர்ந்தது.

மாரிமுத்து நாடார் காட்டில் 'சீஸன் மழை' தூறத் துவங்கியதுபோல் தோன்றியது, இவரால் வந்ததோ அல்லது தானாக வந்ததோ தெரியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் மாற்றப்பட்டு விட்டார். ஹெட்கான்ஸ்டபிள் சொன்னபடி சப்-இன்ஸ்பெக்டர், பெண் மோகம் கொண்டவர் என்றும், பல பெண்களைப் பலவந்தமாகக் கெடுத்தவர் என்றும், எதிர்க்கட்சிகளுக்கு உதவுபவர் என்றும், தட்டிக் கேட்கப்போன