பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஒரு கோட்டுக்கு வெளியே ...


சைக்கிள்காரனின் துண்டைப் பிடித்தவன். பிடியை விடாமலே பேசினான்:

“இந்தச் செறுக்கி மவனுக்கு திமிறு மாமா. குட்டாம்பட்டிக் குளம் பெருகிட்டு. இனிமேல் குட்டாம்பட்டிக்காரங்கள தென்காசி கோர்ட்ல பாக்கலாமுன்னு சொல்றான். நாம மூளைகெட்டதனமா சண்ட போட்டுக்கிட்டு கோர்ட்ல போவுறது பாக்க, இந்தத் தேவடியா மவனுக்கு ஆசயப் பாரும். இவன இப்பவே கைய கால ஒடச்சிட்டு, போலீஸ்ல சரணாவலாம்னு பாக்றேன். கோர்ட் வரைக்கும் வேணுமுன்னாலும் போகலாம். பரதேசிப்பய மவன், என்னமா கேட்டுட்டான்?”

மாரிமுத்து நாடார், சைக்கிள்காரனைப் பார்த்தார். அவன் நடுங்கிக் கொண்டே சொன்னான்:

“மொதலாளி, ஒங்க ஊரோட தாயா பிள்ளயா பழவுனவன். பதினைஞ்சு வருஷமா நெதமும் சைக்கிள்ல சாமான் கொண்டு போடுறவன். பழகுன தோஷத்துல, தமாஸுக்குச் சொல்லிட்டேன். அதுக்கு என்ன... என்ன...”

“பழகுன தோசத்துக்கு, அத்து மீறிக் கேட்ப, இல்லியால-?”

சைக்கிள்காரன் ஏங்கி ஏங்கி அழுதான். மாரிமுத்து நாடார் கூட்டத்தைக் கண்களால் அடக்கிவிட்டுப் பேசினார்.

“நீ சொன்னது நல்லா இருக்கான்னு நீயே நெனச்சிப் பாரு. இந்த குட்டாம்பட்டிக்கு வடக்கே, கோவூர்ல ஆத்துப் பாசனம் இருக்கு. மேக்க, நித்தியப்பட்டையில குத்தால ஆறு பாயுது. தெக்க, கடையத்துல இருந்து தெக்க போகப் போக ஆத்துப் பாசனம். கிழக்கே, ஆலங்குளத்துக்கு அங்க நல்ல குளத்துப்பாசனம். இதுக்கு இடையில இருக்கறது பொட்டல் காடா இருக்குது. இதில எங்க ஊருதான் கழிச்சிப்போட்ட பயவூரு. காளியாத்தா கிருபையில இந்த வருஷந்தான் குளம் பெருகியிருக்கு. எல்லாரும் சந்தோஷமா இருக்கோம். நீ அபசகுனமா கோர்ட் கீட்டுன்னு பேசலாமா? இது ஒனக்கே நல்லா இருக்கா?”

“தப்புத்தான் மொதலாளி -”

“சரி, திரும்பிப் பார்க்காம போ. அவன விடுடா, ஏய் தங்கச்சாமி ஒன்னத்தாண்டா. ஒழுஞ்சிபோறான். விட்டுடு-”

சைக்கிள்காரன், பெடலை மிதிக்கக் காலைத் தூக்கப் போனான். கால் தரையிலிருந்து வரமறுத்தது. ‘மொதலாளி, தங்கச்சாமி எனக்கு