பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூண்டுக்குள் சென்று...

87



"மெட்ராஸுக்கு. இங்க பஸ் ஏறி தென்காசி போகணும். தென்காசில இருந்து ரயிலு."

"கடைசியிலே எங்க சரோசாக்காவ கைவுட்டுட்டிய."

"ஒன்ன மனைவியாய் நினச்ச பிறகு இனிமே எந்தப் பொண்ணோடேயும் நல்லபடியாக் குடும்பம் நடத்த முடியுமாங்றது சந்தேகந்தான்!"

"சும்மாச் சொல்றீங்க. பட்டணத்துக்காரர் வார்த்த கிராமத்தோட சரி. நினைக்கமாட்டீய!"

"அதுவுஞ்சரிதான். மறந்தால்லா நினைக்கதுக்கு? நீதான் மறந்துடுவ."

"நெனச்சால்லா மறக்கதுக்கு?"

அவன் முகத்தைச் சுழித்தான். அவள் வேண்டும் என்றுதான் பொங்கி எழுந்த இதயப் பிரவாகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினாள். அவனை, அவன் பொருட்டு, அதிகமாகத் தன்னிடம் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை. இதனால்தான் 'லாக்கப்பில்' இருக்கும் அய்யாவைப் பற்றிக்கூட அவள் சொல்ல விரும்பவில்லை. அவளுக்காக, அவன போராட வருவான் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் ஏழெட்டுத் தங்கைகள் அவனை நம்பியிருக்கும்போது, அவள் ஒன்பதாவது தங்கை மாதிரிதான் நடந்து கொள்ள வேண்டும். அது முடியாததுதான். அதனால், அவனிடம் தன்னைப் பிணைத்துக்கொள்ளாமல், குறைந்தபட்சம் அவளைச் சுற்றி, அவன் கட்டிவிட்ட பிணைப்புக் கயிற்றின் முனையை, அவள் காட்டிக் கொள்ளலாகாது. இருவருக்குமே தர்மசங்கடமான நிலைமை. அதைப் போக்குவதுபோல், சப்-இன்ஸ்பெக்டர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். லோகுவைப் பார்த்துவிட்டு 'ஹலோ' என்றார். ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.

"என்ன மெட்ராஸுக்கா?"

"ஆமாம். ரொம்ப பிஸியா?"

"அத ஏன் கேக்றீங்க. மினிஸ்டர் டி.பி.யில் இருக்கார்." உலகம்மைக்கு ஒரு சந்தேகம்.

"மந்திரிக்கு டி.பி.யா? அட கடவுளே, அப்போ நாளக்கி எங்க ஊருக்கு வர மாட்டாரா?"