பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

சமணமுனிவருள் தோன்றியுள்ள அந்தணர்கள் யாவருக்கும் தாதையாக விளங்கும் புத்த பிரானே ஆதி அந்தணர் என்பது போன்ற விரிவாம் (அலாய்சியஸ் II 588).

என்றும் விளக்குவர்.

அந்தணர் என்போர் சமணத் துறவிகளேயென்னும் கருத்தை வலியுறுத்தும் முகத்தான்,

இத்தேசம் எங்கும் பெளத்தர்கள் நிறைந்துள்ள காலத்தில் புத்த நிலையாம் உண்மை உணர்ந்தவர்களை பாலி பாஷையில் அறஹத்துக்கள் என்றும் சமஸ்கிருத பாஷையில் பிராமணர்கள் என்றும் தமிழ் பாஷையில் அந்தணர்கள் என்றும் வழங்கப்பெற்ற பெயர்கள் அவரவர்கள் ஞான சாதனத்தால் சாந்த குணம் மிகுந்த தன்மையாலும் சருவசீவர்களையும் தன்னுயிர் போல் பாதுகாக்கும் அன்பின் மிகுதியாலும் எதிரிகளின் பலனைக்கருதாது ஈகையின்நின்று ஆதரிக்கும் செய்கையாலும் அறநெறிகளை அடியார்களுக்கு ஓதி அல்லல்களை அகற்றுவதினால் உண்டாயவைகளாம் (அலாய்சியஸ் II 86).

என்று தாசர் சொல்வது கருதற்பாலது. பழந்தமிழ் இலக்கியங்களில் அந்தணர் என்று குறிப்பிடப்படுவோர் இவர்களே எனின் அச்சொல் ஒரு சாதியைக் குறிக்கும் என்பதால் எழுந்துள்ள பெருஞ்சிக்கல் தீரும்.

தாசர் புத்தர் பற்றியும் பெளத்த சமயம் பற்றியும் பேசும்போது பழந்தமிழ் நூல்களில் சமண சமயத்தைச் சார்ந்தவையென்று கருதப்படுவனவற்றையும் தமக்குச் சான்றாதாரங்களாகத் தருவது வழக்கம். இதற்கு அவர் தரும் தன்னிலை விளக்கமும் ஆராயத்தக்கது. “இத்தேசத் தமிழ்க்குடிகளில் சிலர் புத்தமதம் வேறு, அருக மதம் வேறென்றும் கூறுகிறார்களே, அது சரியா?” எனும் கேள்விக்கு அவர் தரும் விடை:

சகஸ்திர நாம பகவனென்றும் ஆயிர நாமத்தால் வாழியனென்றும் வழங்கும் புத்த பிரானுக்கே அருகன் என்னும் பெயரும் உரிய தென்பதை அடியிற்குறித்துள்ள பின்கலை நிகண்டால் அறிந்து கொள்ளலாம். 11 வது நிகண்டு தகர வெதுகை “புத்தன், மால், அருகன், சாத்தன்” ரகர வெதுகை

“தருமராசன்றான், புத்தன் சங்கனோடு அருகன் தானும்”

உலக ரட்சகனை வடதேசமெங்கும் பகவனென்றும் புத்தரென்றும் வழங்கி வருவது போல் தென் தேசமெங்கும் இந்திரனென்றும் அருகரென்றும் விசேஷமாகக் கொண்டாடி வந்தார்கள்.