106 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்
விருந்தோம்புதலே பற்றறுத்து ஐம்புலன் அடைத்தலுக்கோர் வழியாதலின் அவ்வேள்விக்குத் தலைப்படாது விருந்தினரை வீணே பரிந்து உபசரிக்கின்றோம் என்பது விழலே என்பது கருத்து (அலாய்சியஸ் II 614)
என்று விளக்கம் பெறும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் (121)
எனும் குறளை விளக்கும் தாசர்,
மனவொடுக்கம், நாவொடுக்கம், தேகவொடுக்கம் உடையோர் உலகத்தில் சுகவாழ்க்கையைப் பெறுவதுடன் முத்தி நிலையாம் வானவரோடு அமைந்து நித்திய வாழ்க்கையைப் பெறுவார்கள். அத்தகைய ஒடுக்கமில்லாதோர் மாறாப் பிறவியில் சுழன்று தீரா துக்க சாகரத்தில் ஆழ்வார்கள் என்பது கருத்து (அலாய்சியஸ் II 627).
என்றுரைப்பார். அமரரோடு சேர்வதை ‘முத்தி நிலை’யென்றும் இருள் என்பதை வெறும் நிரையம் அல்லது நரகம் என்று சொல்லாது பிறவிக்கடலாம் துக்க சாகரம் என்றும் அவர் பொருள் தருவது கருதற்பாலது.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொக்கும் குன்றக் கெடும் (134)
என்னும் குறளில் ‘பார்ப்பான்’ எனும் சொல் யாரைக் குறிக்கிறது எனும் சிக்கலுக்கு அவர் காணும் தீர்வு புதுமையானது. அக் குறளுக்குத் “தன்னை அறிந்து ஆராயதவனாயினும் குற்றமில்லை, தன்னை அறிந்தாராய்வோன் எனத் தோன்றிய மானிடன் நல்லொழுக்க நெறியினில்லானேல் கெடுவான் என்பது பதம்” என்று உரை கூறி,
ஒருவன் தனது நற்செயல்கள் ஈதீது என்றும் துற்செயல்கள் ஈது ஈதென்றும் தன்னை மறந்திருப்பினும் குற்றமில்லை. மானிடன் என்னும் மேலாய்ப் பிறப்பில் தோன்றி அப்பிறப்பின் சிறப்பால் இஃது நல்வினை அஃது தீவினையென்று உணர்த்தும் நல்லொழுக்க நெறியில் குன்றுவானாயின் எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவியே மேலாய தென்னும் சிறப்புக் குன்றி விவேக மிகுந்தோரால் விலங்கோ, பேயோ, நரனோ என்று இகழப்படுவான் என்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் “எப்பிறப்பாயினும் ஏமாப்பு ஒருவற்கு மக்கட் பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில், கற்றலும் கற்றவை கேட்டலும், கேட்டதன்கண் நிற்றலும் கூடப்பெறின்”. தொல்காப்பியம் “உயர்திணை என்மனார் மக்கட்கட்டே அஃறிணை