பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 123


என்னும் அடிகளையும் இறவா நிலையிலிருக்கும் நிர்வாண நிலையே சிவகதியாகும் என்பதற்கு,

இன்பமற்றென்னும் பேரானெழுந்து புற்கற்றைத் தீற்றித்

துன்பத்தைச் சுரக்கு நான்கு கதியென்னும் தொழுவில் சேர்த்து

நின்ற பற்றார்வநீக்கி நிருமலன் பாதஞ்சேரின்

அன்பு விற்றுண்டு போகிச் சிவகதி அடையலாமே (அலாய்சியஸ் 1562)

என்னும் பாடலையும் மேற்கோள்களாகத் தருவார்.

இந்துக்கள் என்னும் ஆரியர்கள் இந்நாட்டில் குடியேறுவதற்கு முன் பெளத்த அரசர்களுக்கும் வணிகர்களுக்கும் வேளாளர்களுக்கும் கன்மக் குருக்களாயிருந்து திருமணச் சடங்குகளை நடத்தி வந்தவர்கள் வள்ளுவர்களேயென்றும் இப்பொழுது வள்ளுவர்கள் செய்யும் சடங்குகள் இந்து சமயத்தைச் சார்ந்தவை என்றெண்ணுவது தவறென்றும் சாக்கைய பெளத்தர்கள் நடத்திய திருமணங்கள் பற்றி மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி ஆகிய நூல்களிலிருந்து அறிந்து கொள்ள முடியும் என்றும் எடுத்துரைப்பார் தாசர். அன்னார் “மணவரை இயற்றியதை”

அடிமணை பவழமாக அரும் பொனால் அலகு சேர்த்தி

முடிமணி அழுத்திச் செய்த மூரிக்காழ் நெற்றி மூழ்கக்

கடிமலர் மலரை நாற்றிக் கம்பல விதானம் கோலி

இடும்புகை மஞ்சிற் சூழ மணவரை இயற்றினாரே

என்ற பாடலும் வடமீன் எனும் அருந்ததியை மணமகளுக்குக் காண்பித்து அருந்ததியைப் போல் கற்புடையவளாக வாழும்படி வாழ்த்தியதை,

விளங்கொலி விசும்பில் பூத்த அருந்ததிக் காட்டியின் பால்

வளங்கொளப் பூத்த கோல மலரடி கழிஇய பின்றை

இளங்கனை யாழி யேந்த வயினி கண்டமர்ந்திருந்தான்

துளங் கெயிற்றழுவை தொல்சீர் தோகையோ டிருந்தது ஒத்தான்

என்ற பாடலும் மஞ்சள் நீரினாலும் சந்தனக் குழம்பினாலும் மணமக்கள் விளையாடி மகிழ்ந்தார்கள் என்பதை,

அன்னப் பெடை நடுக்கி அசைந்து தேற்றா நடையாளும்

மன்னர் குடைநடுக்கும் மாலை வெள்வேல் மறவோனும்

மின்னு மணிக்குடத்தின் வேந்தரேந்த மண்ணாடி

கன்னங்கடி மலரும் துகிலும் சாந்தும் புனைந்தாரே (அலாய்சியஸ் II 127-9)

என்ற பாடலும் சுட்டும்.