ப. மருதநாயகம் ✤ 207
அங்ஙனமின்றி சாதிய ஆசாரமும் பெருக்க வேண்டும், உத்தியோகங்களும் உயர வேண்டும், பொருளாசையும் வளர வேண்டும், கிறீஸ்தவர்கள் என்னும் கூட்டமும் அதிகரிக்க வேண்டும் என்பதாயின் கிறீஸ்துவின் நீதி போதங்கள் ஒருக்காலும் பரிமளிக்க மாட்டாது. அவரது போத பரிமளம் எக்காலத்தில் மறைகின்றதோ அப்போதே கிறிஸ்துவின் மார்க்கமும் மறைவதற்கு வழியாகும் . . . மத்தேயு 20-ஆம் அதிகாரம் 29-ஆம் வசனம்: கிறீஸ்துவானவர் தனது மாணாக்கர்களையும் அவ்விடம் வந்துள்ள மக்களையும் நோக்கி என் நாமத்தின் நிமித்தம் வீட்டையாவது சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ அவன் அதற்கு நூறத்தனையான பலனை அடைந்து நித்திய சீவனையும் பெறுவானென்று திட்டமாகக் கூறியிருக்கிறார். . . .
“கிறிஸ்தவன் எனும் சிறந்த மொழியானது
அவன் கிறிஸ்து எனும் பொருளைத் தரும்”
அதாவது கிறிஸ்துவின் நடையுடை பாவனை ஒழுக்கங்களைப் பின்பற்றியவன் எவனோ கிறிஸ்து அவனாவான் என்பதாம் (அலாய்சியஸ் I 92).
பைபிளிலிருந்து தக்க மேற்கோள்களைத் தந்து எத்தகைய அச்சமோ உள்நோக்கமோ இல்லாமல் பாதிரியார்களுக்கு அவர்களுக்கு விருப்பமான அவர்கள் கையாண்டு வந்த மொழியிலேயே தாசர் விண்ணப்பத்தைச் சார்ந்திருப்பது பெரும் பாராட்டுக்குரியதாகும்.
உண்மைகளை விளக்கி அவற்றை நிலைநாட்டத் தாசர் தக்க வாதங்களையும் சான்றுகளையும் தக்கமொழி நடையில் எடுத்துச் சொல்வார்."தாழ்ந்த சாதியினர் அல்லது தாழ்ந்த வகுப்பார் என்பவர்கள் யார்’ எனும் தலைப்பில் அவர் எழுதும் சிறிய கட்டுரையில் பிறரை வஞ்சித்துத் தமது நிலையை உயர்த்திக் கொண்டவர்கள் மீது அவர் காட்டும் அறச்சினம், ஏமாற்றப்பட்டவர்கள் மீது காட்டும் பரிவு, உண்மையறியாது ஆள்வோர் அநீதி தொடரக் காரணமாகின்றார்களே என்ற வருத்தம், உண்மையை யாவரும் அறிய வேண்டுமே என்ற ஆதங்கம், எது சரியென்பது தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஆகிய உணர்வுகளெல்லாம் பளிச்சிடக் காணலாம்.
இத்தேசத்துள் பிச்சை இரந்து தின்கின்றார்களே அவர்கள் தாழ்ந்த வகுப்பார்களா, பொய்யைச் சொல்லிச் சீவிக்கின்றார்களே அவர்கள் தாழ்ந்த வகுப்பார்களா, களவு செய்து சீவிக்கின்றார்களே அவர்கள் தாழ்ந்த வகுப்பார்களா. இதன் விபரம் தெரியவில்லை