பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


கூறியிருப்பது காண்கவென்றும் இலக்கிய மேற்கோள் சான்றுகளோடு நிறுவுவார்.

கடவுள் வாழ்த்தில் மட்டுமல்லாமல் வேறிடங்களில் பல குறள்களை விளக்கும் போதும் தாசர் புத்தரையும் புத்த தன்மத்தையும் உள்ளே கொண்டு வந்துவிடுகிறார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்

இந்திரனே சாலும் கரி (திருக்குறள் 25).

எனும் குறள் இரண்டு வகையாகப் பொருள் கூறப்பட்டு வருகிறது. தாசர் கூறும் பொருள் இவ்விரண்டிலிருந்தும் மாறுபட்டது. இங்கு “இந்திரன்” புத்தரையே குறிக்கும் என்று கூறிக்கீழ்க்காணும் விளக்கம் தருவார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தினையும் அவித்த வல்லபங்கொண்டு ஐந்திரர் என்னும் பெயர் பெற்று ஐ. இ. ஆகத்திரிந்த வடவட்சர பேதத்தால் இந்திரரென வழங்கியதும் அப்புத்த பிரானாகிய இந்திரரே வானவர்களாம் தேவர்களுக்கெல்லாம் அரசனும் குருவாகவும் விளங்கியதுமன்றி இத்தேசம் எங்கும் புத்த பிரானையே இந்திரரெனப் பூசித்து அரசமரத்தடியிலும் அறப்பள்ளிகளிலும் இந்திர விழாக்கள் கொண்டாடிவந்த ஓர் பேரானந்தத்தால் இந்திரரைக் கொண்டாடியக் குடிகளை இந்தியர்களென்றும் கொண்டாடும் தேசத்தை இந்தியாவென்றும் - சிறப்புப் பெற வழங்கியவற்றிற்குப் பகரமாக சார்பு நூலார் அருங்கலைச் செப்பு “இந்தியத்தை வென்றான் தொடர் பாட்டோடாரம்ப, முந்தி துறந்தான் முனி” என்றும் “அறநெறிச்சாரம் ஆக்கியோன் முனைப்பாடியார் இந்தியக் குஞ்சரத்தை ஞானப்பெருங்கயிற்றால் சிந்தினைத் தூண்பட்டிச் சேர்த்தியே பந்திப்பர், இம்மைப்புகழும் இனிச் செல்கதிப்பயனும் தம்மைத் தலைப்படுத்துவார்” என்றும் “மணிமேகலை ஆக்கியோன் சாத்தனார் இந்திரர் எனப்படும் இறைவ நம்மிறைவன், தந்த நூற் பிடகமாத்தி காயமதன்” என்றும் ஐம்பொறிகளை அவித்துப் பெண்ணாசையை ஒழித்தவர்களுக்கே இந்திரர் எனும் பெயர் வாய்க்கும் என்பதைச் சீவகசிந்தாமணி ஆக்கியோன் திருத்தக்கதேவர்,

“ஆசை ஆர்வமோடு ஐயமின்றியே

யோசை போயுலகு உண்ண நோற்றபின்

ஏசுபெண் ணொழித்து இந்திரர்களாய்த்

தூய ஞானமாய்த் துறக்க மெய்தினார்”

என்னும் ஆதாரம் கொண்டு ஐந்தவித்தவர்களின் சிறப்பை அறியவேண்டில் இந்தியத்தை வென்ற வானவர்க் கரசனாம் இந்திரரே போதுஞ் சாட்சியென்பது விரிவு (அலாய்சியஸ் II 585).