பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஒரு மாமரமும் மரங்கொத்திப்

 பறவைகளும்
 அந்த மாமரம், இலைகளால் கண்ணீர் விட்டது. காய்களால் மாரடித்தது. பூக்களால் புலம்பியது. பின்னர் வலியின் உச்சத்தால், உணர்வுகள் மரத்துப் போக, உடலெங்கும் துளை போடும் மரங்கொத்திப் பறவைகளை, பாதி மயக்கத்தில், பட்டும் படாமலும் பார்த்தது. ஆனால், அந்த மரங்கொத்திகளோ, ஆப்பு போன்ற தம் அலகால், அந்த மரத்தை அங்கு, இங்கு எனாதபடி. எங்கும் குத்திக் குத்திக் குடைந்து கொண்டிருந்தன. துளை போட்ட இடங்களை அலகுகளால் அங்குமிங்குமாய் தட்டி, அந்த மரத்தின் மரணத்திற்கு இழவு மேளச் சத்தத்தையும் எழுப்பிக் கொண்டிருந்தன.
 ஒரு காலத்தில், இந்த மாமரத்திற்கே, இந்த மரங் கொத்திகளின் கவர்ச்சியான தோற்றத்தில், ஒரு கிறக்கம் ஏற்பட்டதுண்டு. இவற்றின் தங்க நிற முதுகும், இடையிடையே கருப்புக் கோடுகளும், இந்த மாமரத்தை வியக்க வைத்திருக்கின்றன. இதன் முதுகு வண்ணத்திற்கு இணை