பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


குறிப்பாக அவள் முகத்தில் பாய்ச்சிய ஒளி வீச்சு போல் பரவி அவள் நிலையை நன்கு வெளிச்சமிட்டது. பையன் சொக்கிப் போனான் அவள் பேரழகிலே! கிரங்கிக் கிறுகிறுத்தான் குமாரியின் கண் வீச்சிலே! அவன் உள்ள நெகிழ்வை உணர்ந்து வெற்றிச் சிரிப்பு சிரித்தாள் அவள். அவ்வளவுதான்! அவனைத் தீர்த்துக்கட்டி விட்டது. அந்தச் சிரிப்பு. இனி அவன் அவள் அடிமைதான்.

அவன் பரபரப்புடன் சொன்னான்: 'இல்லை, செல்வா. நீங்கள் சினிமா நட்சத்திரம் ஆகவேண்டும். அதே போல் நடனக் கலையுலகில் தனியொளிச் சந்திரனாகத் திகழவேண்டும்.'

'அது தானே கேட்டேன்!' என்று சொல்லிச் சிரித்தாள் அவள்.

வீடு வந்து சேர்ந்ததும் காரிலிருந்து குதித்திறங்கிய குமாரி 'ரொம்ப தேங்ஸ், இன்னொரு நாள் ஈவ்னிங்லே வாங்க, மிஸ்டர் ராஜ், காபி டியன் எல்லாம் சாப்பிட்டு விட்டுப் பேசலாம்' என்று சொன்னாள்.

'ஓ' என்று மகிழ்வுக்குரல் கொடுத்த ராஜா உற்சாகமாகச் சொன்னான் 'உங்களுக்கு ஆட்சேபணையில்லை யென்றால், ஏதாவது சினிமா பார்க்கப் போகலாம்' என்று.

'ஓ யெஸ். செய்தால் போச்சு எனக்கூறிக் களுக்குச் சிரிப்பு சிந்திவிட்டு டான்ஸ் ஆடிக்கொண்டே வீட்டினுள் சென்றாள் அவள்.

அவள் போகும் அழகையே கவனித்து மயங்கியிருந்த ராஜா பெருமூச்செறிந்துவிட்டு காரை ஒட்டிச் சென்றான்.

குமாரி சொல்லிய 'இன்னொரு நாள் ஈவ்னிங்'கை காலவறையரையில்லாமல் ஒத்திபோட விரும்பாத ராஜா மறுநாள் மாலை மூன்றரை மணிக்கே வந்து சேர்ந்துவிட்டான். செல்வாவும் அவள் தாயும் மகிழ்வுடன் வரவேற்றனர்.

தாய் சங்கரபுஷ்பம் அடுப்பங்கறையில் தங்கியிருந்தபோது, செல்வா ராஜாவுக்குத் தனது ஆடை அணி அலங்காரப் பொருள்களை யெல்லாம் காட்டினாள்.

'ஒரு டான்ஸ் குரூப் ஆரம்பிக்கணும். அதற்காகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் சேகரித்து வருகிறோம்! என்றாள் அவள்.

'நல்ல ஏற்பாடு' என்றான் அவன்.