பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


அவள். 'அவர் விரும்பியபடி அவரையே கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம். அவருடன் வாழ்க்கை நடத்த இசைந்திருந்தால், அந்தஸ்தாவது இருக்கும். பலபேரை நம்பிக்கெட்டிருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிராது!' என்று கூட நினைத்தது உண்டு. ஆனால் அபூர்வமாக எப்பவாவதுதான்!

புகழ்ப் பசியும் சுதந்திர தாகமும் தணியமுடியாத அளவிலே இருந்ததனால், குமாரி செல்வா இஷ்டம் போல் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு நாட்டியத்தில் அகில இந்தியப்புகழ் வாங்கித் தரமுடியும் என்று உறுதி கூறி அலைந்த நடனக்கலையரசு ஒருவரை அடிக்கடி அவளுடன் காணமுடிந்தது.

வலை என்று தெரிந்த பிறகும்கூட அதன் அழகில் மயங்கி வட்டமிடும் ஈ அதில் அகப்பட்டு விடுவதும் இயல்புதானே.


4

மனித சமுதாயத்தின்மீது வெறுப்புற்று மலையுச்சியைத் தேடிப் போனாலும்கூட, அத்தனிமையில் அலுத்துப்போய் மறுபடியும் மனிதகுலத்தையே நாடி வந்த ஜாரதுஷ்ட்ரன் போல்தான் ஆசிரியர் பரமசிவமும் நடந்து கொண்டார்.

'வால் நட்சத்திரம்' செத்துப்போனதும் 'தமிழ்நாடு சுத்த மோசம்' என்று சொல்லிவிட்டு இமயத்தை நோக்கிப்போனவர் பிறகொரு நாள் திடீர் விஜயம் செய்தார். இடைக் காலத்தில் ஏழு வருஷங்கள் பறந்தோடிப் போயிருந்தன.

அக்காலத்தில் பரமசிவம் என்ன செய்தார், எப்படி வாழ்ந்தார் என்பது பரமசிவமே சொன்னால்தான் தெரியும். அவர் கீதாசார்யன் கண்ணனைப்போல 'இந்த ரகசியங்களிலே நான் மெளனம்' என்று சுருக்கமாக அறிவித்து விட்டார். ஆகையினாலே பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள்.

பரமசிவம் காசியில் ஒரு சாப்பாட்டுக் கிளப்பில் செர்வர் வேலை பார்த்ததாகச் சொன்னார்கள். அவருக்குத்தெரிந்த வள்ளல் நண்பர் ஒருவருடன் உல்லாசமாக ஊர்சுற்றிவிட்டு காஷ்மீரத்தில் சுகவாசம் அனுபவித்தார் என்று பேசினார்கள். யாரோ ஒரு தெருப்பாடகியின் பின்னால் சிங்கிதட்டித் திரிந்து, அந்தப்-