142
வேலைக்காரி விசாலம்
மனது பண்ணி பர்மாவைத் தாக்கினான்; நமக்கும் நல்ல காலம் வந்தது; அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு வந்து இங்கே குடியும் குடித்தனமுமானோம். கொடுத்து வைக்கவில்லை, போய்விட்டது!" என்று கையை விரித்தார் ராமேஸ்வரன்.
மனோன்மணி அதற்குமேல் ஒன்றும் கேட்க விரும்பவில்லை; பேசாமல் உள்ளே போய்விட்டாள்.
***
வீட்டு முற்றத்தில் உட்கார்ந்தபடி வீதியை நோக்கிக் கொண்டிருந்தார் ராமேஸ்வரன்— தமது பழைய எஜமானரின் வரவை எதிர்பார்த்துத்தான்!
சிறிது நேரத்திற்கெல்லாம் அவரும் வந்து சேர்ந்தார். மலர்ந்த முகத்துடன் அவரைக் கை கூப்பி வரவேற்று, தமக்கு எதிரேயிருந்த ஆசனத்தில் உட்காரும்படி வேண்டிக் கொண்டார் ராமேஸ்வரன். மரியாதைக்காகத் தமக்கு முன்னால் எழுந்து நின்ற ராமேஸ்வரனை நோக்கி, "பரவாயில்லை, உட்காருங்கள்!" என்றார் வந்தவர்.
இந்தச் சமயத்தில் ஏதோ வேலையாக வெளியே போய் விட்டு வந்த விசாலம், முற்றத்தில் உட்கார்ந்திருந்த புதிய மனிதரைப் பார்த்ததும், "ஹா! நீங்களா!" என்று அலறிக் கொண்டே மின்னல் வேகத்தில் அந்த மனிதரை நோக்கிப் பாய்ந்தாள். அடுத்த நிமிஷம் அவருடைய மடியில் தலையைப் புதைத்துக் கொண்டு அவள் விம்மி விம்மி அழுதாள்.
"விசாலம்! நீயா விசாலம்! இதென்ன கோலம்? இந்தக் கோலத்தில் உன்னைப் பார்க்கவா நான் இத்தனை நாளும் உயிரை வைத்துக் கொண்டிருந்தேன்? குழந்தை எங்கே?—குழந்தை எங்கே?" என்று கண்ணீர் மல்கத் துடிதுடித்து கொண்டே அவளைத் தூக்கி நிறுத்தினார் அவர்.