பக்கம்:ஒரே உரிமை.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

கிளி பேசுகிறது!

முளைத்துக் கொண்டிருந்தன. புதிய இறகு முளைப்பதோடு என் உள்ளத்தில் புதிய உற்சாகமும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பொந்தில் இருந்தபடி வானத்தை எட்டி எட்டிப் பார்ப்பேன். அந்த நீல வானிலே எத்தனை எத்தனையோ பறவைகள் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கும். அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பறந்து சென்று அவைகளுடன் கலந்து கொள்ளவேண்டும் போல் தோன்றும். அந்தப் பறவைகள் என்னை 'வா, வா' என்று அழைத்தனவோஎன்னவோ—எனக்குத் தெரியாது; எனக்கு மட்டும் அவை 'வா, வா' என்று என்னை அழைப்பது போலிருக்கும்.

ஒரு நாள் என்னுடைய ஆவலை அம்மாவிடம் தெரிவித்தேன். "அவசரப்படவேண்டாம்; காலம் வரும்போது உன்னுடைய ஆசை நிறைவேறும்" என்று அவள் சொல்லி விட்டாள்.

"காலம் எப்போது வருவது, ஆசை எப்போது நிறைவேறுவது?" என்று எனக்கு ஆத்திரமாயிருந்தது.

அதற்கேற்றாற்போல் அன்று ஒரு சிட்டுக் குருவி, நான் இருந்த மாமரத்துக்கும் பூமிக்குமாக 'ஜிவ், ஜிவ்' என்று பறந்து, 'கீச், கீச்' என்று விளையாடி என்னுடைய ஆத்திரத்தை மேலும் மேலும் கிளப்பி விட்டுக் கொண்டே, இருந்தது.

நான் துணிந்து விட்டேன். "வான வீதிக்கு வேண்டுமானால் போக வேண்டாம்; இந்தச் சிட்டுக் குருவி போல் இங்கேயே மாமரத்துக்கும் பூமிக்குமாகப் பறந்து கொண்டிருந்தால் என்ன?" என்று எண்ணிக் கீழே இறங்குவதற்காகச் சிறகடித்தேன். ஆனால், என்ன ஏமாற்றம்! என்னால் ஓர் அடிகூடப் பறந்து செல்ல முடியவில்லை; 'பொத்'தென்று கீழே விழுந்து விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/148&oldid=1149454" இலிருந்து மீள்விக்கப்பட்டது