குழந்தையின் குதூகலம்
55
தொலைந்து போகட்டும்; அவரைப் பற்றிய கவலையே நமக்கு வேண்டாம்!” என்று எண்ணியவனாய், அன்று அவன் தன் தாயாரை நோக்கி, “அம்மா! என்னை ‘பீச்’சுக்காச்சும் ஒரு நாளைக்குக் கூட்டிக்கிட்டுப் போயேன்! என்றான்.
தாயாரின் கண்களில் நீர் சுரந்தது. “அந்தப் பாழும் ‘பீச்’சு எப்படியிருக்கும், என்னமாயிருக்கும் என்றுகூட எனக்குத் தெரியாதேடா, கண்ணு!” என்றாள் அவள்.
மணிக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போய்விட்டது. “என்ன! உனக்குக் கூடவா தெரியாது!” என்றான்.
தாயார் மெளனம் சாதித்தாள்.
“பொய் சொல்லாதே, அம்மா! நிஜமாச் சொல்லு!” என்றான் மணி.
“நிஜமாத்தான் சொல்றேன்; அது எந்தப் பக்கம் இருக்கும் என்றுகூட இன்று வரை எனக்குத் தெரியாதேடா!”
மணிக்கு அழுகை வந்துவிட்டது. “போ, அம்மா! நீ பொய் சொல்றே!” என்று அவன் ‘உண்மை’யைச் சொல்லி, அழ ஆரம்பித்து விட்டான.
தாயார் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தாள், அவன் கேட்கவில்லை. அழுதபடியே சிறிது நேரத்திற்கெல்லாம் அயர்ந்து தூங்கி விட்டான்.
***
அன்றிரவு மாணிக்கம்பிள்ளை சாப்பிட்டானதும் தன்னை ‘பீச்’சுக்காவது கூட்டிக் கொண்டு போகும்படி குழந்தை அழுத விஷயத்தை அவரிடம் தெரிவித்தாள் அவருடைய மனைவி.