பக்கம்:ஒரே உரிமை.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

கருவேப்பிலைக்காரி

பறக்கும் கிளிப் பாவையுடன் ஏதோ 'ங்கா' பாஷையில் பேசிக் கொண்டிருக்கிறாள்.

அப்பப்பா! சில சமயம் அவள் தன் 'ங்கா' பாஷையைக் கை விட்டுவிட்டு, 'குவா, குவா' என்ற பாஷையில் கத்த ஆரம்பித்து விட்டால் 'போதும், போதும்' என்று ஆகிவிடுகிறது. இம்மாதிரி சமயங்களில் அடுப்புக் காரியமும் ஆகவேண்டி யிருந்தால், 'குழந்தை வேண்டாம்!' என்று தீர்த்த யாத்திரை போவதற்கு ஏதாவது கோயிலோ, குளமோ இருக்காதா என்று தோன்றி விடுகிறது!

நானும் குழந்தை பிறந்ததிலிருந்துதான் அவரிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன், "வீட்டில் இருப்பது நான் ஒருத்தி; அழுகிற குழந்தையை வைத்துக் கொண்டு என்னால் உங்கள் அவசரத்துக்குச் சமைத்துப் போட முடியாது. அதைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க யாராவது ஓர் ஆளைப் போடுங்கோ!" என்று. அவர் எங்கே அதைக் காதில் வாங்கிக் கொள்கிறார்!

"எனக்குக் கிடைப்பதோ மாதம் தொண்ணூற்றைந்து ரூபாய். அதில் ஐந்தே ஐந்து ரூபாயை என் செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி தொண்ணூறு ரூபாயை உன்னிடமே கொடுத்துவிடுகிறேன். நீயோ அதுவே செலவுக்குப் போதவில்லையென்று எப்பொழுது பார்த்தாலும் அழுது வடிகிறாய் —முடியுமானால், நீ அதற்குள்ளேயே குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதற்காக ஒரு வேலைக்காரியைப் பார்த்து வைத்துக் கொள்ளேன்; நானா வேண்டாம் என்கிறேன்!" என்று சொல்லி அவர் தம் பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுகிறார்.

அவர் சொல்வதிலும் நியாயம் இல்லாமற் போகவில்லை. அப்படியானால் நான் சொல்வதில்தான் நியாயம் இல்லையோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/94&oldid=1149361" இலிருந்து மீள்விக்கப்பட்டது