பக்கம்:ஒரே உரிமை.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருவேப்பிலைக்காரி

93


இவ்வாறு நான் எண்ணிக் கொண்டிருக்கும் போது தான் அம்புஜம் வந்தாள் அவள் என் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரி. அவளுடைய கணவரும் என்னுடைய கணவருடன்தான் வேலைப் பார்க்கிறார். இருவருக்கும் ஒரே சம்பளந்தான் என்று கேள்வி.

அப்போதுதான் நான் அலமாரியைத் திறந்து ஒரு கதைப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்தேன். அம்புஜம் வருவதற்கும், குழந்தை ராதை 'ங்கா' பாஷையைக் கைவிட்டுவிட்டு 'குவா' பாஷையில் கத்த ஆரம்பிப்பதற்கும் சரியா யிருந்தது.

"உன்னை வைத்துக் கொண்டுகூட யாராவது ஏதாவது படிக்க முடியுமோ?" என்று அலுத்துக் கொண்டே நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டுக் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்வதற்காக எழுந்தேன்.

"இருப்பது நீங்கள் இரண்டே பேர்—இந்தக் குழந்தையைத் தவிர! பகவான் கிருபையில் அவருக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. மாதம் ஐந்து ரூபாய் கொடுத்தால் யாராவது ஒருத்தி வேலைக்கு வந்து குழந்தையை அழவிடாமல் பார்த்துக் கொள்ள மாட்டாளோ? அப்படிச் செய்வதை விட்டுவிட்டு இப்படி அலுத்துக் கொள்வானேன்?" என்றாள் அம்புஜம்.

"அவருக்குச் சம்பளம் நூறு ரூபாயா? இல்லையே!—தொண்ணூற்றைந்து ரூபாய். அதிலும் ஐந்து ரூபாய் அவருடைய செலவுக்கு எடுத்துக் கொண்டு என்னிடம் தொண்ணூறு ரூபாய்தானே கொடுக்கிறார்!" என்றேன் நான், குழந்தையைத் தூக்கித் தோளின் மேல் போட்டுக் கொண்டே.

"ஏன், பாக்கி ஐந்து ரூபாய் எங்கே போகிறதாம்? நேற்றுக்கூட ஏதோ பேச்சு வாக்கில் அவர் என்னிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/95&oldid=1149363" இலிருந்து மீள்விக்கப்பட்டது